கல்முனை மாநகர சபையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இதுவரை நடத்தப்படாததன் காரணமாக, கல்முனை பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக, கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எச்.எம். அப்துல் மனாப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் நியமிக்கபப்ட்டும் இதுவரை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் முறையாக நடைபெறாததால், மக்களின் அடிப்படை தேவைகளை மையமாகக் கொண்ட பல அபிவிருத்தி திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும், அரச திணைக்களங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கல்முனை மக்களின் நீண்ட நாள் தேவைகளான உட்கட்டமைப்பு, வீதி அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்பில் முறையான தீர்மானங்கள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே, ஜனாதிபதி, அமைச்சர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் போன்றோர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை மீண்டும் ஆரம்பித்து, கல்முனை மக்களின் அபிவிருத்தி தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என எம்.எச்.எம். அப்துல் மனாப் வலியுறுத்தியுள்ளார்.
No comments: