News Just In

1/20/2026 09:32:00 AM

28 கோடிக்கும் அதிக பணம், இரு வாகனங்களுடன் ஒருவர் கைது!

28 கோடிக்கும் அதிக பணம், இரு வாகனங்களுடன் ஒருவர் கைது!




சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 283,300,000 ரூபா பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபர் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டில் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இந்த சந்தேக நபர் தொலைபேசி மூலம் தொடர்புகளை பேணி, அக்கடத்தல்காரரின் ஆலோசனையின் பேரில், இந்நாட்டிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து இப்பணத்தை சேகரித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தினால் குறித்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று (20) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: