News Just In

12/17/2025 06:35:00 PM

இராணுவத்திடமிருந்து மீட்ட கட்டிடத்தினை வாடகைக்கு வழங்குவதற்கு காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை !

இராணுவத்திடமிருந்து மீட்ட கட்டிடத்தினை வாடகைக்கு வழங்குவதற்கு காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை !


நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச சபைக்குச் சொந்தமான இராணுவமுகாம் அமைந்திருந்த காணி பல தசாப்தங்களுக்கு பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்டு சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள கட்டிடத்தினை தற்காலிக மதிப்பீடொன்றினை பெற்று அதனடிப்படையில் கேள்விகள் கோரப்பட்டு கட்டிடத்தினை வாடகைக்கு வழங்குவதற்கு காரைதீவு பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

காரைதீவு பிரதேச சபையின் 04 வது சபையின் 05 வது மாதாந்த சபைக் கூட்டம் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் நேற்று (16) நடைபெற்ற போதே இந்த தீர்மானம் சபையோரால் நிறைவேற்றப்பட்டது. மேலும், கடந்த சபைக் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட 2026ம் ஆண்டிற்காக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் 08 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

அத்துடன் 2025ம் ஆண்டில் கிடைக்கப் பெற்ற மேலதிக பெறுவனவுகளுக்காக தயரிக்கப்பட்ட குறைநிரப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டதுடன் வீதி விளக்குகளை இயக்கம் செய்வதற்கான கடமையில் ஈடுபடுத்தப்படும் நபர்களுக்கு மாதாந்த கொடுப்பனவினை சபை நிதியிலிருந்து வழங்குவதற்கு சபை அனுமதி பெறப்பட்டது.

மேலும் மாளிகைக்காடு உப நூலகத்திற்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை பாதுகாப்பாக அலுமாரி ஒன்றினை கொள்வனவு செய்வதற்கும், மாவடிப்பள்ளியில் புதிதாக இரண்டு இறைச்சிக் கடைகளை நடாத்துவதற்கும் பதிலீட்டு அடிப்படையில் கடமையாற்றிவரும் ஊழியரின் சேவைக்காலத்தினை மேலும் 06 மாதங்களுக்கு நீடிப்பதற்காக உள்ளூராட்சி ஆணையாளரின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளவும் சபையின் அனுமதி பெறப்பட்டது.

சபையின் செயலாளராக கடமையாற்றும் அ.சுந்தரகுமார் விரைவில் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளதாலும், ஓய்வுக்கான முன் விடுமுறை கோரி விண்ணப்பித்துள்ளமையினாலும் பதில் செயலாளராக திருமதி வனிதா டேவிட் அமிர்தலிங்கம் என்பவரை நியமிப்பதற்கு சபை அனுமதி வழங்கியது. இதன்போது உறுப்பினர்கள் பலரும் பல்வேறுபட்ட மக்களின் பிரச்சினைகளை சபைக்கு முன்வைத்து உரையாற்றினர்.

No comments: