News Just In

6/10/2025 03:01:00 PM

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மாப் பள்ளிவாசல் ஜமா அத்தார் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவையொட்டி மாபெரும் நிகழ்வு

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மாப் பள்ளிவாசல் ஜமா அத்தார் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவையொட்டி மாபெரும் நிகழ்வு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு நகர மத்தியில் அமைந்துள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்மாப் பள்ளிவாசல் ஜமா அத்தார் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவையொட்டி மாபெரும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய ஜமா அத்தார் சங்கம் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

இது விடயமாக சமூக செயற்பாட்டாளரும் பிரமுகருமான எச்.எம்.எம். முஸ்தபா அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற ஜமா அத்தார் சங்க நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

சரித்திரபூர்வமாக இயங்கி வரும் இப்பள்ளிவாசல் நாட்டிலுள்ள அனைத்து இன மக்களின் இன நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில்; வாழும் தமிழ் முஸ்லிம் நல்லுறவின் முத்தாய்ப்பாகவும் இருந்து வருகிறது.

அதனைச் சிறப்பிக்கும் முகமாகவும் ஜமா அத்தார் அமைப்பின் 3 வருட நிறைவையொட்டியும் பல்வேறு நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மாப் பள்ளிவாசல் ஜமா அத்தார் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு முக்கியஸ்தர்களான யூ.எல்.எம். அஸ்ஹர், எச்.எம்.எம். முஸ்தபா, ரீ.எல். ஜவ்பர்கான், எம்.ஐ.வி. முனீர், ஏ.எச்.ஏ. ஹுஸைன்இ எம்.எம்.ஏ. மபாஸ், ஏ.பி.எம். பஸ்ரின்நூர், ஏ.எல்.எம். மீராஸாஹிப், எம்.எஸ். அப்துல் காதர் ஆகியோர்p கலந்து கொண்டனர்.

17ஆம் நூற்றாண்டின் சகாப்தத்தில் நிறுவப்பட்ட மட்டக்களப்பு நகரப் பள்ளிவாசல், அதன் தொடக்கத்தில், 1920 முதல் 1971 வரை இலங்கையில் குடியேறிய இந்திய வம்சாவளியினரான சொலுக்கர்களின் குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்டது, மேலும், அவர்கள் பள்ளிவாசலையும் அதன் அசையும் அசையாச் சொத்துக்களையும் உள்ளுர் மக்களான அறங்காவலர்களிடம் ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினர்.

இப்பள்ளிவாசல் 1950 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தில் இலக்கம் R/ 729/BT / 42 இன் கீழ் பதிவு செய்யப்பட்டு 1965 ஆம் ஆண்டு JAMIUS SALAM JUMMA MOSQUE (TOWN MOSQUE) என்ற பெயரில் ஜும்மா பள்ளிவாசலாக அறிவிக்கப்பட்டது.

இந்த மஸ்ஜித் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வக்ஃப் சபையின் வழிகாட்டுதலின்படி அறங்காவலர் குழு அதன் நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறது.

No comments: