News Just In

3/14/2025 10:43:00 AM

வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணியும் வந்தாறுமுலை மத்திய மகா வித்தியாலய அணியினர் சம்பியனாக தெரிவு!

வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணியும் வந்தாறுமுலை மத்திய மகா வித்தியாலய அணியினர் சம்பியனாக தெரிவு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

சர்வதேச மகளிர் தினததை அனுஷ்டிக்கும் முகமாக மட்டக்களப்பில் இடம் பெற்ற மாபெரும் வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணியினரும், வந்தாறுமுலை மத்திய மகா வித்தியாலய அணியினரும் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

“நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக - அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்" எனும் இவ்வருட சர்வதேச மகளிர் தொனிப்பொருளில் அமைந்த இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வீ எபெக்ற் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அமுலாக்க ஆதரவுடன் இடம்பெற்றது.

இப்போட்டி மாவட்ட செயலக, பிரதேச செயலக, பாடசாலை வலைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்களுக்கிடையே மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் இடம் பெற்றுவந்தது.

போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா, மேலதிக மாவட்டச் செயலாளர் சுதர்சனி சிறீகாந்த், காணிக்குப் பொறுப்பான மாவட்டச் செயலாளர் நவரூபரஞ்சினி, மாவட்ட செயலக உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ. பிரணவன், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என். சனஞ்ஜெயன், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கென்னடி, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ரீ. திலீப்குமார் உட்பட, பிரதேச செயலாளர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ்கள், நினைவுச் சின்னம் பணப் பரிசில்கள் என்பவற்றையும் வழங்கி வைத்தனர்.

இப்போட்டி நிகழ்வுகளில் 16 பாடசாலை அணிகளும், மாவட்ட செயலக அணியும், 9 பிரதேச செயலக அணிகளும் பங்குபற்றியிருந்தன.

பலத்த போட்டிக்கு மத்தியில், பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டியில் வந்தாறுமுலை மத்திய மகா வித்தியாலயம் முதலாம் இடத்தையும், வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் சிசிலியா பெண்கள் கல்லூரி நான்காமிடத்தையும் தக்கவைத்துக் கொண்டன.

அதேவேளை, மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணியினர் முதலாம் இடத்தையும், வவுணதீவு பிரதேச செயலக அணியினர் இரண்டாம் இடத்தையும் மாவட்ட செயலக அணியினர் மூன்றாம் இடத்தையும், வாகரை பிரதேச செயலக அணியினர் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

No comments: