News Just In

3/08/2023 10:59:00 AM

திறைச்சேரியின் செயலாளர் சிறை செல்லநேரிடும் – நாடாளுமன்றில் எச்சரித்தார் சாணக்கியன்!




இந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டின் பொருளாதார நிலைமை,பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் உரையாற்றினார்.

2500 ரூபாவினால் ஒரு குடும்பம் தமது ஒருமாத செலவுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார். ஆகவே இவரின் பொருளாதார மதிப்பீட்டை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம்,நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என ஆளும் தரப்பினர் நாடாளுமன்றத்தில் பெருமையாக குறிப்பிட்டாலும் நடைமுறையில் நிலைமை தலைகீழாக உள்ளது. வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவதற்கு முன்னர் தேவையான மருந்துகளை மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிடப்படுகிறது.

தமது பிள்ளைகளின் மருத்துவ மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு ஒரு தாய் தனது இரு பிள்ளைகளை கிணற்றில் தள்ளி தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் நாட்டில் பதிவாகியுள்ளது.

ஆகவே பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்துக்கும், நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது என குறிப்பிடும் அரசாங்கம், கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 01ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 158 பில்லியன் ரூபாவை தேசிய மட்டத்தில் கடனாக பெற்றுக்கொண்டுள்ளது. வரவுசெலவுத் திட்டத்தின் வரி அதிகரிப்பு கொள்கை ஊடாக கடனை மீள் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார கொள்கையினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எரிபொருள் விலையேற்றத்தினால் 4 இலட்சம் முச்சக்கர வண்டி சாரதிகள் வாழ்வாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுமா அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமைய பிற்போடப்படுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு அரசாங்கம் தடையேற்படுத்தியுள்ளதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி விடுவிப்பதை தடுக்கும் திறைச்சேரியின் செயலாளருக்கு எதிராக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய திறைச்சேரியின் செயலாளர் செயற்பட வேண்டும், இல்லாவிடின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு அமைய சிறை செல்ல நேரிடும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிச்சையாக முன்னேற்றமடையும் திறன் கொண்டவர்கள்.

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயம்,கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடி கைத்தொழில் ஆகிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எனக் கூறுவதற்கும் அருவருப்பாக இருக்கின்றது. இந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையில் மோதலை உருவாக்குவதுதான் அவருடைய பொறுப்பாக காணப்படுகின்றது. அவர் இந்த அரசாங்கத்தின் கைகூலியாக இருக்கின்றார்.

அவர் வட பகுதியிலுள்ள மீனவர்கள் குறித்து சிந்தித்து பார்க்காமல் அவர் என்ன செய்கின்றார். இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டினையே அவர் முன்னெடுக்கின்றார்.

இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ள தமிழக அரசியல்வாதிகளையும், தமிழக மக்களையும் எங்களுக்கு எதிரானவர்களாக மாற்றும் நோக்கிலேயே அவர் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் இனிவரும் காலங்களில் இவ்வாறானவர்களை இனங்கண்டு விரட்டியடிக்க வேண்டும்.

எங்களுடைய பொருளாதாரத்தை முழுமையாக அழித்த இந்த அரசாங்கம். விவசாயிகளுக்கு 100 ரூபாய்க்கு நெல்லை கொள்வனவு செய்வதாக சொன்ன ஜனாதிபதி, இன்று அறுவடை முடிந்தும் 35 ரூபாய்க்கும் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை.

கிழக்கு மாகாண ஆளுநரின் மிக மோசமான செயற்பாடுகள் காரணமாக, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினுடைய காணிகளில் குறிப்பாக மயிலத்தமடு, மாதவனை போன்ற பகுதிகளில் தமிழ் மக்களின் கால்நடைகள் சுடப்படுகின்றன.

பொலிஸார் வேடிக்கை பார்க்கின்றனர். பொலிஸ் ஆணைக்குழுவில் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.

No comments: