News Just In

10/14/2022 07:38:00 AM

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக கண் சத்திரசிகிச்சைகள் செய்வதில் சிக்கல்!

பார்வையிழப்பினால் பாதிக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் பார்வையை மீளப் பெறும் திறன் கொண்டுள்ளனர்.

எனினும், அதற்குத் தேவையான சத்திரசிகிச்சைகளைச் செய்வதற்கான வசதிகள் இல்லை என கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் எம்.டி.எஸ். குணதிலக்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சத்திரசிகிச்சைக்கு தேவையான கான்டாக்ட் லென்ஸ்கள், தடுப்பூசிகள் மற்றும் இதர சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்றார். குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு கண் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கண் சத்திரசிகிச்சைகளுக்கு பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட லென்ஸ்கள் மற்றும் மருந்துகளே தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலைமையால் கண் சத்திரசிகிச்சைகள் தாமதமானதுடன் தேசிய வைத்தியசாலையில் இம்மாதம் மாத்திரம் கண் சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் சுமார் ஐநூறு பேர் உள்ளனர்.

தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கான்டாக்ட் லென்ஸ்கள் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, கண் வைத்தியசாலைக்கு மருந்துகள் மற்றும் லென்ஸ்கள் வழங்குபவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இருப்பதாக தேசிய கண் வைத்தியசாலை தெரிவிக்கின்றது.

தற்போது பார்வையற்றோரின் எண்ணிக்கை இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: