News Just In

9/07/2022 04:22:00 PM

ஒழிந்து திரியும் நாமலை மட்டக்களப்பிற்கு அழைத்து வந்த TMVP மட்டக்களப்பின் சாபக்கேடு – சாணக்கியன்!








நாட்டில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு எம்மால் நிரந்தர தீர்வு வழங்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இளம் தரப்பினர் கிரிகெட் விளையாட்டை சிறந்த முறையில் முன்னோக்கி கொண்டு செல்கிறார்கள். ஆசிய கிண்ண கிரிகெட் போட்டியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணிக்கு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியலலையும் இளம் தரப்பினரிடம் ஒப்படைக்குமாறு நாட்டு மக்களிடம் மீண்டும் வலியுறுத்துகிறேன். மந்த போசணை தொடர்பிலான சபை ஒத்தி வைப்பு விவாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 வயதிற்கு குறைவான 55 ஆயிரம் பிள்ளைகள் உள்ளார்கள். இந்த எண்ணிக்கையில் 10 சதவீதமானோர் மந்தபோசணை அல்லது ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரிகள் அறிக்கையிட்டுள்ளனர்.

அதற்கு மேலதிகமாக 11 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நூற்றுக்கு 10 சதவீதமாக காணப்பட்ட மந்த போசணை அல்லது ஊட்டச்சத்து குறைப்பாடு 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் 17 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

எமது மாவட்டத்தை பொறுத்தவரை கர்ப்பிணி தாய்மாரின் உரிய காலத்திற்கு தேவையான நிறை குறைவடைந்துள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

போசணை குறைப்பாடு உள்ள பிள்ளைகளுக்கு வழங்கும் பகலுணவுக்காக 30 ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்போது அத்தொகை 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு முறையாக கிடைக்கப்பெறுவதில்லை.

நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்து நாட்டு மக்களை மந்தபோசணைக்கு கொண்டு சென்ற தரப்பினர் தற்போது புதிய அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கு கூற வேண்டியவர்கள் தற்போது மேலவை இலங்கை கூட்டணி என்பதொன்றை உருவாக்கியுள்ளார்கள்.

லீ குவான் யூ, சிங்களே என குறிப்பிட்டவர்கள், வைத்தியர் சாபி தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் தற்போது புதிய அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்கள். நாட்டு மக்கள் இவர்களுக்கு ஏமாற கூடாது. பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் மாத்திமல்ல இவர்களும் பொறுப்பு கூற வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டுக்கு வருகை தந்துள்ளமை ஒரு வழியில் நல்லது. இல்லாவிடின் மஹிந்த சுழங்கவை போல் கோட்டா சுழங்கவையும் ஆரம்பித்திருப்பார்கள். தற்போதைய நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானத்துடன் இருக்க வேண்டும்.

மந்த போசனைக்குள்ளாகியுள்ள பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத நிலையில் உள்ள போது தீக்கிரையாகிய வீடுகளுக்கான நட்டஈட்டை அரசியல்வாதிகள் இரட்டிப்பாக்கியுள்ளார்கள், ஒரு வீட்டுக்கு பதிலாக இரு வீடு, மதிப்பீட்டாளர் நெருக்கடிக்குள் என பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளன.

நாட்டில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு எம்மால் நிரந்தர தீர்வு வழங்க முடியும். தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கும், நீண்ட கால கோரிக்கைகளுக்கும் நிலையான தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும்.

கடந்த நாட்களில் வெளிநாட்டிற்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு அந்நாடுகளின் அரசியல் தரப்பினர், இலங்கையர்களுடன் சந்திப்பில் ஈடுப்பட்டேன். முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் அதிகாரத்தை பகிர்ந்தளித்துள்ளன. புலம் பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அதிகார பகிர்வு அவசியமானது.

கடந்த நாட்களில் வெளிநாடுகளில் முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன். எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளில் அரசியலில் தொடர்புமில்லாமல் உள்ள இரண்டாம் தரப்பினருடன் ஒன்றிணைந்து இலங்கைக்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு ஆகியவற்றுக்கு தீர்வு அவசியமாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபகேடு. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

பாடசாலைகளும் இராணுவம் வசமுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் கட்சி மாநாட்டிற்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை மட்டக்களப்புக்கு வரவேற்றுள்ளார்.

தனது சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் நாமல் ராஜபக்ஷ உள்ளார். அவ்வாறிருக்கையில் நாமல் ராஜபக்ஷவை மேடைக்கேற்றி மட்டக்களப்பு மாவட்ட மக்களை தரம் குறைத்துள்ள சந்திரகாந்தனை சபையில் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாமலிருந்திருந்தால் அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் கூட கிடைத்திருக்காது. கல்முனை பிரதேச செயலக பிரிவு குறித்து விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுப்போம்.“ எனத் தெரிவித்துள்ளார்.


No comments: