News Just In

7/20/2022 12:15:00 PM

கூட்டமைப்பு - டலஸ், சஜித் இடையிலான எழுத்துமூல உறுதிப்பாட்டின் உள்ளடக்கம் !



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட எழுத்துமூலமான உறுதிப்பாட்டின் உள்ளடக்கம் வெளியாகியுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட கீழ்வரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட டலஸ் அழகப்பெரும, சஜித் பிரேமதாஸ ஆகிய இருவரும், தாம் பதவிக்கு வந்து, மூன்று தொடக்கம் ஆறு மாத காலம் முடிவடைவதற்குள் குறித்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தி நிரந்தரத் தீர்வுகாண்பதாகவும், இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வை எட்டுவதற்கான உடனடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதாகவும் ஏற்றுக்கொண்டு பத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களதும் முன்னிலையில் எழுத்துமூல உடன்படிக்கையில் ஒப்பமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்விடயங்களாவன

1.நீண்டகாலமாக காரணமற்று சிறையிலுள்ள தமிழ் அரசியல்கைதிகளில் ஒருதொகுதியினரை மூன்று மாத காலத்திற்குள் முதற்கட்டமாக விடுதலை செய்வது.

2.அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலின் பிரகாரம் பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதுடன் கணக்காளர் ஒருவரையும் நியமித்தல்.

3.வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் தனிப்பட்ட காணிகளிலும், பொதுப்பயன்பாட்டுக்குரிய அரச காணிகளிலும் அடாத்தாக முகாமிட்டிருக்கும் இராணுவத்தினருக்கு அக்காணிகளை நிரந்தரமாக வழங்கும் முகமாக, நில அளவைத் திணக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அளவீட்டுப் பணிகளை உடனடியாக நிறுத்துதல்.

4.தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியவளத் திணைக்களம் உள்ளிட்டவற்றால், வடக்கு, கிழக்கு தமிழர் நிலங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துதல்.

5.பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குதல் மற்றும் அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை முதலில் வெளிப்படுத்தல்.

6.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் செயலகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உதவுதல்.

7.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநிறுத்தவும், உண்மையைக் கண்டறிவதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்தல்.

8.வடக்கு, கிழக்கிலுள்ள தனியார் காணிகளிலிருந்து படையினரை வெளியேற்றி, தமது சொந்த நாட்டில் இன்னும் அகதிகளாக உள்ள எமது மக்கள் தமது பூர்வீக நிலங்களில் குடியேற வழிவகை செய்தல்.

9.வடக்கு, கிழக்கில் குடிகொண்டிருக்கும் இராணுவப் பிரசன்னத்தைக்; குறைத்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழி அமைத்தல்.

10.கடந்த எண்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தமிழர்களின் உரிமைக்கான அரசியல் தீர்வுக்காக, காலதாமதமற்ற உடனடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல்.

இதனைவிடவும், காணி சம்பந்தமாக நான்கு துணை விடயங்களும் உடன்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: