News Just In

5/25/2022 01:04:00 PM

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க கட்சிசார் மனநிலை கைவிடப்பட வேண்டும்.!




- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க கட்சிசார் அரசியல் மனநிலை உடன் கைவிடப்பட வேண்டும் என சுற்றாடல் அமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை 24.05.2022 இடம்பெற்றபொழுது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர்,

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சகலரதும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகள் மற்றும் இயற்கை நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள தாக்கங்ககளால் தொடர்ந்து நமது நாடு முடங்க நேரிட்டது. இந்தக் காலங்களில் சுற்றுலாத்துறையும் வீழ்ந்தது. வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுவதும் வெகுவாகக் குறைந்தது. உள்நாட்டு உற்பத்திகளில் ஏற்பட்ட வீழ்ச்சி ஏற்றுமதிச்செலாவணி வருமானத்தை பாதித்தது. இவைகள்தான், இந்த நிதி நெருக்கடியை ஏற்படுத்தின. இதுபற்றி முறையாகச் சிந்தித்தால் மூன்று மாதங்களில் எரிபொருள் பிரச்சினையை தீர்க்கலாம்.

நான், சவூதி அரேபியாவிலுள்ள பெற்றோலியம் கனியவள பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவன். எங்கள் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றவரே. இன்று சவூதி அரேபியாவில் எரிபொருள் அமைச்சராக உள்ளார். எனவே, இதுகுறித்த எனது நிபுணத்துவத்தை பகிர்ந்துகொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிப்பேன்.

நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் கூட, நெருக்கடியைக் கொண்டு வரும் பல சவால்களை வெற்றிகொள்ள முடிந்திருக்கிறது. ஊழல், இலஞ்சம் என்பன எனது அரசியலில் இல்லை. எனது அரசியல் எதிரிகளால் கூட இதை நிரூபிக்க முடியாது. தற்போதைய சூழ்நிலையால், அரசியலிலும் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன.

கட்சிகளுக்கு அப்பால் சென்றுதான் இப்பிரச்சினைகளத் தீர்க்க முடியும். இதனால்தான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குகிறேன். ஜனாதிபதி, மற்றும் பிரதமர் ஆகியோர் என்னில் நம்பிக்கை வைத்தே இந்த அமைச்சுப்பதவியை வழங்கி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்;.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர்மஸ்தான், அலிசப்ரி ரஹீம், முஷர்ரப் முத்து நபீன் உள்ளிட்டோரும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


No comments: