ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிராகவும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் திங்கட்கிழமை (04.04.2022) காலை ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
கிழக்கு பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் விவசாய பீடம் அமைந்துள்ள தொகுதியின் நுழைவாயிலில் ஆரம்பமான மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி கொம்மாதுறை திருவள்ளுவர் வீதியூடாக சென்று மட்டக்களப்பு - திருமலை வீதியில் அமைந்துள்ள வந்தாறுமூலை பிரதான வளாகம் வரை முன்னெடுக்கப்பட்டது.
பிரதான வீதியில் ஒன்று கூடிய மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உணவு இல்லை, எண்ணெய் இல்லை, மின்சாரம் இல்லை, கேஸ் இல்லை, பொருள் விலை, வரிச்சுமைகளை குறையுங்கள், மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள் போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments: