News Just In

3/10/2022 04:19:00 PM

விடுதலையாக இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க?


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மிக விரைவில் விடுதலை செய்யப்படலாம் என நேற்று சூசகமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.தான் செய்த தவறு சம்பந்தமாக நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோர ரஞ்சன் ராமநாயக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

எனினும் ரஞ்சன் ராமநாயக்க தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருவதால், அவர் விடுதலையாக இருக்கும் ஒரே வழி ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்பதால், அவருக்கு பொது மன்னிப்பை வழங்குமாறு பல தரப்பினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ரஞ்சன் ராமநாயக்க சிறைத் தண்டனை பெற காரணமாக அமைந்த நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் அவலர், நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என ஜனாதிபதியின் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று ரஞ்சன் ராமநாயக்க கூறி வந்ததன் காரணமாக அது நடக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையில், தான் வேண்டும் என்று இந்த தவறை செய்யவில்லை எனவும் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவிக்க தயார் என அவர் நேற்று கூறியுள்ளார்.

இதனடிப்படையில், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது சம்பந்தமாக சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கலாம் என பேசப்படுகிறது.

அதேவேளை ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய வலியுறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தனர்.

ரஞ்சன் ராநாயக்கவின் விடுதலை மற்றும் இலங்கையின் ஏனைய விடயங்கள் சம்பந்தமாக ஹரின் பெர்னாண்டோ, மனித உரிமை பேரவையில் உரையாற்றி இருந்தார்.


No comments: