News Just In

3/05/2022 05:41:00 PM

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு!

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களை நிறுத்தக்கோரியும் மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் தொழிற்சங்கம் என்பன இணைந்து இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்தது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் உட்பட அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அண்மையில் வந்தாறுமூலையில் செய்தி சேகரிக்க சென்ற ஐ.பி.சி தமிழ் ஊடகவியலாளர் தேவபிரதீபன் தாக்கப்பட்டமையை கண்டித்தும், ஊடகவியலாளர்களுக்கு காவல்துறை விசாரணையென்ற பெயரில் முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல்களை நிறுத்தக்கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரிலுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஞாபகார்த்த தூபிக்கு அருகில் கவன ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், கண்டன ஊர்வலமும் நடைபெற்றது.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல் காரணமாக ஊடகவியலாளர்கள் தங்களது பணிகளை முன்னெடுக்கமுடியாமல் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும், அவற்றினை நிறுத்த உரிய தரப்புகள் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்துடன் ஊடகவியலாளர் தேவபிரதீபன் மீதான தாக்குதலை கண்டித்தும் அவருக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன், சுதந்திர ஊடக கடமையினை நிறைவேற்ற அனுமதிக்குமாறும் இதன்போது கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.





No comments: