News Just In

3/10/2022 04:34:00 PM

தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதி!



தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதி முயற்சிக்கெதிராகவும், வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் மக்கள் விழிப்புணர்வுக் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடல் நேற்யை தினம் (9) மன்னாரில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தமிழர் தாயகப் பரப்பில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், 13வது திருத்தச் சட்டத்தை வலியுறுத்திய தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது மக்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டது.

அத்துடன், தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதி முயற்சிக்கெதிராகவும், வடக்குகிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் வவுனியாவில் எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் பேரணிக்கு வலுவூட்டும் வகையிலும் மக்களுக்கான தெளிவூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இத் தெளிவூட்டல் கலந்துரையாடல் வவுனியாவிலும் இடம்பெற்றிருந்தது.

வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: