News Just In

1/10/2022 06:41:00 PM

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை நிச்சம் உருவாக்குவோம்! : சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை நிச்சம் உருவாக்குவோம் எனவும் அதில் இந்த அரசாங்கத்தால் திட்டமிட்டு நிறுத்தப்பட்ட வீடுகள் மாத்திரமல்லாது அனைத்து மக்களினதும் வீடற்ற பிரச்சனையை தீர்ப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் நாட்டினுடைய எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச புதுக்குடியிருப்பில் மக்கள் மத்தியில் சூளுரைத்துள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சஜித் பிரேமதாச இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கெடுத்துள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வேணாவில் பகுதியில் மக்கள் சந்திப்பு ஒன்றில் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்டார்.

வேணாவில் முத்துமாரி அம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற குறித்த மக்கள் சந்திப்புக்கு வருகை தந்த சஜித் பிரேமதாஸ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் நான் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கட்டம் கட்டமாக அனைத்து மக்களுடைய வீட்டு பிரச்சினைகளையும் தீர்க்கும் முகமாக பல்வேறு வீட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வந்தேன். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் குறித்த வீட்டுத்திட்டங்களை திட்டமிட்டு தடுத்து நிறுத்தியுள்ளது. ஆனால் நான் உங்களிடம் ஒன்றை தெரிவிக்க விழைகிறேன். ஐக்கிய மக்கள் சக்தியினுடைய அரசாங்கமானது உருவாக்கப்படும். அதை நாங்கள் உருவாக்குவோம். அந்த அரசாங்கத்தில் இவ்வாறு நிறுத்தப்பட்ட வீட்டுப் பிரச்சினைகள் மட்டுமல்ல வீடற்ற அனைத்து மக்களினதும் வீட்டு பிரச்சினையை நிச்சயமாக தீர்க்கப்போம் என தெரிவித்தார்.

முல்லைத்தீவு நிருபர்

No comments: