News Just In

12/12/2021 07:58:00 PM

யானைகளால் சேதமாக்கப்பட்ட வீடு!

எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மஜ்மாநகர் கிராமத்தில் இரவு வேளைகளில் யானைகள் வருகை தந்து தோட்டப் பயிர்கள் மற்றும் குடிசைகளை சேதமாக்கி செல்வதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மஜ்மா கிழக்கு மற்றும் மேற்கு கிராமத்தில் வாழும் மக்கள் தங்களது காணியில் பயன்தரும் மரங்கள், மரவள்ளி தோட்டங்கள் செய்து பராமரித்து வரும் நிலையில் இரவு வேளைகளில் வாழைச்சேனை காகித ஆலை காட்டுப் பகுதியின் ஊடாக வரும் யானைகள் தொடர்ச்சியாக எங்களது பயிர்களை சேதப்படுத்தி செல்லும் நிலைமை காணப்படுகின்றது.

இரவு வேளையில் வாழைச்சேனை காகித ஆலை காட்டுப் பகுதியின் ஊடாக கிராமத்திற்கு வருகை தந்த யானைகள் தென்னை மரம், மரவள்ளி தோட்டம், வீட்டுப் பயிர்கள் மற்றும் வேலிகளை சேதப்படுத்துடன், எங்களது உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை காணப்படுகின்றது.

வாழைச்சேனை காகித ஆலை காட்டுப் பகுதியினை அண்டியதாக மஜ்மா கிழக்கு மற்றும் மேற்கு கிராமம் அமைந்துள்ள நிலையில் குறித்த காட்டுப் பகுதிக்கு வரும் யானை எமது கிராமத்திற்கு வந்து பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றது.

காகித ஆலை வீதியால் எமது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்கின்றனர். அத்தோடு விவசாய செய்கைக்கும் பலர் செல்கின்றனர். குறித்த காட்டுக்குள் இருக்கும் யானைகள் இருப்பதால் அதனால் பயணிப்பவர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

இவ்விடயமாக அரசியல்வாதிகளுக்கு தெரிவித்தால் கரிசனை கொள்வதில்லை. ஆனால் யாரும் யானை அடித்து உயிரிழந்தால் வந்து புகைப்படம் எடுத்து வெளியிடங்களுக்கு காட்டுவதற்கு நடித்து விட்டு செல்கின்றனரே தவிர எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குறித்த பகுதி மிகவும் இருள் நிறைந்து காணப்படுகின்றது. இங்கு வீதி மின்விளக்குகளை அமைத்து தருமாறு ஒட்டமாவடி பிரதேச சபையிடம் முறையிட்டும் இதுவரை எந்த பலனும் இல்லை.

எனவே ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மஜ்மா கிழக்கு மற்றும் மேற்கு கிராம மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கும், பயிர்களை யானைகள் சேதம் செய்யாது எமது பகுதியை சுற்றி யானைகளிடம் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு யானை வேலிகளை அமைத்து தருமாறும், வீதி மின் விளக்குளை பொறுத்தி தருமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.




No comments: