News Just In

8/13/2021 02:16:00 PM

மிக நீண்டகால போதைப்பொருள் வியாபாரி கைது- மட்டக்களப்பில் சம்பவம்...!!


மிக நீண்டகால போதைப்பொருள் கடத்தற்காரரும் வியாபாரியும் நேற்று (12) இரவு 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரவின் தலைமையில் ஹொஸ்டல் வீதி, 3ம் குறுக்குத்தெரு, காத்தான்குடி எனும் முகவரியிலுள்ள வீட்டில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 2 கிலோ 50 கிராம் கேரள கஞ்சாவும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பிஎஸ்.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் வழிகாட்டலில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

57 வயதுடைய பிரபல போதைப்பொருள் வியாபாரி பல முறை சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்பதுடன், இவர் ஓட்டமாவடி, வாழைச்சேனை தொடக்கம் ஏறாவூர், காத்தான்குடி வரை கேரளா கஞ்சா மற்றும் போதைப்பொருள் ஏக வினியோகஸ்தராகச் செயற்பட்டு வந்துள்ளமை முதற்கட்ட விசாரணகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.




No comments: