News Just In

7/28/2021 02:40:00 PM

தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் வழங்கி வைப்பு!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய நாடு பூராகவும் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் வேலைத்திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல பாடசாலைகள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் சிபாரிசிற்கு அமைய தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

அவ்வாறு தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் கட்டங்கட்டமாக  பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அவர்களால் வழங்கி வைக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் நேற்றைய தினம் மட்/ மகாஜனக்கல்லூரி, மட்/ மெதடிஸ்த மத்திய கல்லூரி,மட்/ இந்துக் கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கும் அதே போன்று இன்றைய தினம் மட்/ முனைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலயம், மட்/ துறைநீலாவணை மகா வித்தியாலயம், மட்/ கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ கடிதங்களையும் வழங்கி வைத்துள்ளார். 

இதன்போது அந்தந்த பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை நிர்வாகம் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதே போன்று தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ள ஏனைய பாடசாலைகளுக்கும் இவ் உத்தியோகபூர்வ கடிதங்கள் மிக விரைவில் வழங்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments: