காணொளி - https://youtu.be/-CSHHCX2KMY
கடந்த ஜூன் மாதம் 21 ம் திகதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக அவரது மெய்பாதுகாவலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரத்தின் வழக்கு விசாரணைக்காக இன்று(12) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலர் விளக்கமறியலில் இருந்து வரும் நிலையில் குறித்த மெய்பாதுகாவலருக்கு கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வர முடியாத நிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.
குறித்த வழக்கினை மட்டக்களப்பு பொலிஸ் நடத்துவதுவதில் கொலை செய்யப்பட்டவரின் பெற்றோருக்கு திருப்தி இல்லை எனவும், சந்தேகம் உள்ளதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டதனை தொடர்ந்து வேறு ஓர் பிரிவுக்கு குறித்த வழக்கை மாற்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு இணங்க குறித்த வழக்கை பிரதி பொலிஸ்மா அதிபரிடம் தெரிவிக்கப்பட்டு வேறு ஓர் பிரிவுக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஒப்படைக்க நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த சந்தேக நபரான மெய்பாதுகாவலரை எதிர்வரும் 26 ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் தாய் மற்றும் தந்தை ஆகியோரிடம் குறித்த வழக்கு தொடர்பாக வினவியபோது 26ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக எடுக்கப்படும் என்றும் அதற்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சென்றனர்.
No comments: