News Just In

6/22/2021 09:55:00 AM

விடுவிக்கப்பட்டது ஏறாவூர் நகர பிரதேச கிராம அலுவலகப் பிரிவு...!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 6ஆம் திகதி தொடக்கம் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஏறாவூர் 02 கிராம சேவகர் பிரிவு செவ்வாய்க்கிழமை 22.06.2021 விடுவிக்கப்பட்டது.

தமது பிரதேசம் இரு வாரங்களையும் கடந்து முடக்கப்பட்டிருப்பதாக பிரதேச வாசிகள் அதிருப்தி வெளியிட்டதைத் தொடர்ந்து ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழீம் இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்றதயைடுத்து முடக்கப்பட்ட கிராம அலுவலர் பிரிவு விடுவிக்கப்பட்டது.

முடக்கப்பட்ட பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதாகவும் தெரிவித்த நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழீம் முடக்கப்பட்டிருந்த பிரதேசத்தில் ஏறாவூர் நகர சபையினால் நகர தூய்மையாக்கல் பணிகள் தற்போது தங்குதடையின்றி முன்னெடுப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதி மக்காமடி வீதி ஓடாவியர் வீதிக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் சுமார் 600 குடும்பங்களைச் சேர்ந்த 3000 பேரின் நடமாட்டமும் இயல்பு வாழ்க்கையும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக முடக்கப்படிருந்தது.

அந்தப் பகுதியில் கடைசியாக கடந்த 17 18 ஆகிய இரு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 56 பேர் அடையாளம் காணப்பட்டிருந்ததோடு பிரதேசத்தில் 3 கொரோனா வைரஸ் மரணங்கள் சம்பவித்திருந்ததாகவும் ஏறாவூர் நகர பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா ஷாபிறா வஸீம் தெரிவித்தார்.










No comments: