News Just In

3/01/2020 02:30:00 PM

பாரபட்சமில்லாத வைத்திய சேவைகள் மக்களுக்கு கிடைக்க அரசாங்கம் வழிகாண வேண்டும்-கிழக்கு முன்னாள் முதலமைச்சர்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
பாரபட்சமில்லாத சிறந்த வைத்திய சேவைகள் மக்களுக்குக் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்வதோடு சிறந்த வைத்திய சேவைகள் கிடைப்பதற்குத் தடைக்கல்லாக இருக்கும் மருத்துவத் துறை மாபியாக்களை புறந்தள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்தார்.

ஏறாவூரில் இன்று ஞாயிறன்று 01.03.2020 குழந்தையில்லா தம்பதியினருக்கான மாபெரும் இலவச கருத்தரிப்பு வைத்திய முகாமை (Advance Fertility Clinic) ஜெனெஸிஸ் ஐவிஎப் (Genesis IVF) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
ஏறாவூர் அல் முனீறா மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இலவச மருத்துவ ஆலோசனை வழங்கும் முகாமில் குழந்தைப் பேறில்லாத பல தம்பதிகள் வருகை தந்து வைத்திய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் சிகிச்சைகளையும் இலவசமாகப் பெற்றுக் கொண்டனர்.

அந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட்,

இலங்கையில் மிகச் சிறந்த நவீன வசதி வாய்ப்பையும் நேர்த்தியையும் கொண்ட பல பிரிவுகளையும் உள்ளடக்கியதான தனியார் வைத்தியசாலை பல நூறு மில்லியன் ரூபாய்கள் முதலீட்டில் ஏறாவூரில் அமைக்கும் செயற்திட்டம் ஏற்கெனவே அமுலுக்கு வந்துள்ளது.

இதன்மூலம் பல நூற்றுக்கணக்கான பல்துறை சார்ந்த வைத்திய நிபுணத்துவப் பிரிவினர் வேலை வாய்ப்பைப் பெறுவதோடு நவீன சுகாதாரத் துறையில் மக்கள் உள்நாட்டிலேயே குறைந்த கட்டணத்தில் தமது மருத்துவத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும்.

இவ்வைத்தியசாலை இயங்கத் தொடங்குமாகில் கிழக்கு மாகாண மக்கள் தலைநகர் கொழும்புக்கோ அல்லது இந்தியாவுக்கோ சென்று தமது மருத்துவ சேவைகளைப் பெறும் கால விரயமும் பண விரயமும் அலைச்சலும் ஏற்படாது

பல மில்லியன் ரூபாய்கள் முதலீடடில் மேற்கொள்ளப்படப் போகும் உத்தேச திட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஏராளமானோர் நேரடியான, மறைமுகமான வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளவும் சுகாதாரத் துறையை மேம்பட வைக்கவும் வழியேற்படும்

ஸ்கேன் இயந்திரம் கூட இல்லாத பல அரசாங்க வைத்தியசாலைகள் இன்னமும் இயங்குவதைப் பார்த்து நாம் கவலையடையவேண்டியுள்ளது. சிங்கப்பூர் போன்ற மருத்துவத்துறை வளர்ச்சியடைந்த பல நாடுகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த பல தகுதியான நிபுணத்துவ வைத்தியர்கள் கடமையாற்றுகிறார்கள்.

ஆனால் இலங்கைக்கு வெளிநாட்டு வைத்திய நிபுணர்கள் வருவதில் இலங்கையில் கோலோச்சும் வைத்திய மாபியாக்கள் பெருந்தடையாக இருக்கிறார்கள். அதனால் சிறப்பு வாய்ந்த வைத்திய சேவைகள் இலங்கை மக்களுக்குக் கிடைக்காமல் போய் விடுகின்றன.

எனவே இப்போதுள்ள அரசாங்கம் இந்த இலங்கை வைத்திய மாபியாக்களைக் கட்டுப்படுத்தி சுதந்திரமான  நவீன வைத்திய வசதிகளை அனைத்து மக்களும் பெற்றுக் கொள்ள ஆவன செய்ய வேண்டும்' என்றார்.

இந்த இலவச வைத்திய முகாமில் இந்திய மகப்பேற்று வைத்திய நிபுணர்களான நிர்மலா சதாசிவம், ஸ்ரீரேவதி சதாசிவம், எம்.என். சதாசிவம் ஆகியோர் இந்த வைத்திய முகாமில் நேரடியாகக் கலந்துகொண்டு வைத்திய ஆலோசனைகளை வழங்கினர்.

No comments: