நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து செய்தது என்னவென்றால் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) சிறையில் அடைத்து, ஒரு அரசியல் ரீதியான பழிவாங்கலையே செய்துள்ளதென ஜனசென பெரமுனை கட்சியின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்தின தேரர் தெரிவித்தார்
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சீலரத்தின தேரர் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்று, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்த பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவத்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த தாய் நாட்டினை தமிழர்கள், சிங்களவர்கள் என எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுவித்து, அபிவிருத்தி செய்த சந்தர்பத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழ்ந்தது மிகவும் மனவருத்தத்துக்குரிய விடயமாகும்.
எனினும் தற்போதைய அரசு, பிள்ளையானுக்கு பிணை கொடுத்து அவருடைய செயற்பாட்டை செய்வதற்கு இடமளிக்குமென நாங்கள் அமைதியாக இருக்கின்றோம்.
மேலும் பிள்ளையானுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாங்கள் நீதிமன்றத்துக்கு மதிப்பளிக்கின்றோம்.
எனவே வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருவதனால் இது தொடர்பாக நான் எந்த வசனமும் தெரிவிக்க விரும்பவில்லை
நான் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் இந்த வழக்கை விரைவில் ஆராய்ந்து தீர்ப்பை வழங்கி, நிரபராதி என்றால் நிரபராதி எனவும் குற்றவாளி என்றால் குற்றவாளி எனவும் அவர்களுக்கு பிணை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அனைத்து இனங்களும் ஒன்று சேர்ந்து நாட்டினை கட்டியெழுப்ப வேண்டும் இல்லையெனில் இந்த நாட்டினை எவராலும் கட்டியெழுப்ப முடியாது. ஒவ்வொருவருக்கும் இடையே வைராக்கியம் வேண்டாம் அப்படி வைராக்கியம் செய்பவர்களுக்கு பௌத்த மதகுரு என்ற வகையில் கருணை, அன்பு செலுத்தி ஆசீர்வசிப்பேன்” என தெரிவித்துள்ளார்.

No comments: