News Just In

2/13/2020 09:27:00 AM

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பூரண உடல் நலத்துடன் பெண் குழந்தை பிறந்துள்ளது. சீனாவின் ஹபேய் மாகாணம் வுகான் நகரத்தில் கடந்த வருட இறுதியில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

சீனாவின் ஷாங்ஹலு நகரில் உள்ள மருத்துவமனையில் 33 வயது நிரம்பிய கர்ப்பிணி பெண் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அப்பெண் ஷான் ஜீ மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 37 வார கர்ப்பிணி பெண்ணான அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து உடனடியாக அந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த பெண் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதையும், குழந்தை பூரண உடல் நலத்துடன் இருப்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஒரிரு நாட்களுக்கு பின்னர் குழந்தைக்கு மீண்டும் வைரஸ் பரிசோதனை செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயும் குழந்தையும் பூரண உடல் நடத்துடன் இருப்பதாகவும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: