'பெண்களின் தலைமைத்துவமும் பெண்களின் பாதுகாப்பும் தொடர்பில் சட்ட விழிப்புணர்வு' (Women Leadership and Legal Awareness of Women Security for girls Students) எனும் தொனிப்பொருளிலமைந்த பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசியக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை 16.02.2020 இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட 'அருவி' பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 8 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் கற்கும் 50 மாணவிகள் பங்குபற்றினர்.
கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பிலான சட்ட விழிப்புணர்வுகளை அருவி நிறுவனப் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனனும், மாணவர் ஒழுக்கமும் தலைமைத்துவமும் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோரும் வழங்கினர்.
மேலும் மட்டக்ளப்பு கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசகர் ஏ.ஜெகநாதன், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிவில் பொறியியல் பீட மென்திறன் பயிற்றுநர் றிசாத் ஆதம்லெப்பை ஆகிய வளவாளர்களும் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.
அருவி பெண்கள் வலையமைப்பின் மாவட்ட உதவி இணைப்பாளர் தர்ஷினி ஸ்ரீகாந்த், அதன் அலுவலர்களான சி. பங்கயரதி, என். லுனிற்றா, கவிதா உமாகாந்தன், எஸ். ஜென்ஸியா, தாட்சாயினி, என் நோஜிதா ஆகியோரும் இணைந்து நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.
No comments: