News Just In

1/24/2020 12:42:00 PM

வடக்கு ஆளுநரின் செயற்பாட்டுக்கு எதிராக வலுப்பெறும் கண்டனம்


யாழ்.மாநகர சபையின் விவகாரங்களை கையாள இணைப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற இராணுவ கேணல் தர அதிகாரியொருவரை வடக்கு ஆளுநர் நியமிக்கவுள்ளமைக்கு யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வடக்கில் ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரிகள் இருக்கும்போது, எமது பிரதேசத்தை அறிந்திராத பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரியை, மாநகரசபை இணைப்பு அதிகாரியாக நியமித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த செயற்பாடு மாநகரசபையை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளதாவது, “பல அனுபவம் வாய்ந்த கல்வி புலமைசார் தொழில்சார் அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் இங்கேயே வாழுகின்ற நிலையில் ஒரு பெருபான்மைய இனத்தவரினை அதுவும் ஒரு இராணுவ அதிகாரியினை யாழ்.மாநகர சபைக்கான ஆளுநரின் இணைப்பாளராக நியமிக்க வேண்டி என்ன தேவை எழுந்துள்ளது.

அத்துடன் யாழ்.மாநகர சபையினுடையதும் அதன் ஆளுகைக்குப்பட்ட மக்களினதும் அடிப்படைத் தன்மைகள் மற்றும் அவர்களது பிரச்சனைகளை நன்கு அறிந்த, இந்த மக்களோடையே வாழுகின்ற பல அனுபவம் வாய்ந்த நிர்வாக சேவையாளர்கள் இக்கின்றபோது அவர்களினைக் கருத்திற்கொள்ளாமல் எங்கேயோ ஒரு இடத்தில் வாழுகின்ற எமது பிரதேசம் அதன் மக்களின் தன்மைகள் எதுவும் அறியாத ஒரு ஓய்வு பெற்ற இராணுவ கேணல் தர அதிகாரியை நியமிக்க இருப்பதன் சூட்சமம் தான் என்ன?

யாழ்.மாநகர சபை நிர்வாகத்தின் நடைமுறைகளில் ஒரு சில விடயங்களுக்கு மட்டுமே ஆளுநர்களின் அனுமதிக்காக செல்லவேண்டிய நிலையுள்ளது. ஆனால் இவ் இணைப்பாளரின் நியமனமானது எதிர்வரும் காலங்களில் யாழ்.மாநகர சபை முன்னெடுக்கின்ற எல்லா நடவடிக்கைகளுக்கும் செயற்றிட்டங்களுக்கும் ஆளுநரின் அனுமதியை பெறவேண்டும் என்ற நிலையை உருவாக்குவதற்கான அதாவது எம்மிடம் உள்ள அற்ப சொற்ப அதிகாரங்களையும் பறித்தெடுகின்ற செயலுக்கான ஆரம்ப புள்ளியா என்று எண்ணவும் தோன்றுகின்றது.

மேலும் யாழ்.மாநகர சபைக்கான இணைப்பாளராக ஒரு ஓய்வு பெற்ற கேணல் தர இராணுவ அதிகாரியினை நியமிக்க இருக்கின்ற இச்செயல் நடைபெறுமாயின் அது மிகவும் கண்டனத்திற்குரியது” என குறிப்பிட்டுள்ளார்.

No comments: