News Just In

9/08/2026 09:10:00 AM

விடுதலைப் புலிகளின் குறிசூட்டுப் படை! தலையைக்கூட உயர்த்த முடியாமல் 8 மாதங்கள் போராடிய இலங்கை இராணுவம்

விடுதலைப் புலிகளின் குறிசூட்டுப் படை! தலையைக்கூட உயர்த்த முடியாமல் 8 மாதங்கள் போராடிய இலங்கை இராணுவம்



தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச அரங்கில் தங்களது அரசியல் மற்றும் பரப்புரை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் அளவுக்கு வலுவான வலையமைப்பைக் கொண்டிருந்ததாக முன்னாள் இரானுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வலைதள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்தியதாகக் கூறப்படும் இராணுவத் தந்திரோபாயங்கள், ஆயுத பலம், சர்வதேச நிதி வலையமைப்பு மற்றும் இராணுவம் எதிர்கொண்ட தடைகள் தொடர்பில் சவேந்திர சில்வா இந்த நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு மற்றும் ஆதரவுகள் தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கப்பல் போக்குவரத்து, மற்றும் சர்வதேசத்தின் வர்த்தகங்கங்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறாக நிதிகளை திரட்டிக்கொண்டனர். மேலும், வெளிநாடுகளில் தங்களுக்கு சாதகமான அரசியல் சூழலை உருவாக்கும் நோக்கில், அந்நாடுகளின் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல்வாதிகளுக்கு புலம்பெயர் அமைப்பின் ஆதரவாளர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர் என தனது கருத்துக்களை முன்வைத்தார்.


மேலும், விடுதலைப் புலிகளின் பிரதான அரசியல் இலக்கு இலங்கையில் தனித் தமிழ் அரசை உருவாக்குவதாக இருந்தது எனவும் தெரிவித்தார்.

போர் நடைபெற்ற காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது குறித்து அவர்கள் சிறந்த திட்டமிடலை கொண்டிருந்தனர் எனவும் கூறியுள்ளார்.

அதன்படி, பேச்சுவார்த்தைகளின் இடைவேளைகளைப் பயன்படுத்தி போராளிகளை மீள ஒருங்கிணைத்து, ஆயுத பலத்தை அதிகரித்து அடுத்த கட்டத் தாக்குதல்களுக்கு அவர்கள் தயாராகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள பரந்த நெல்வயல் பகுதியான ‘Rice Bowl’ பகுதியில் இராணுவம் எதிர்கொண்ட சவால் குறித்தும் சவேந்திர சில்வா விரிவாக இதில் விளக்கியுள்ளார்.

மரங்கள் அல்லது இயற்கையான மறைவிடங்கள் இல்லாத அந்தப் பரந்த வயல்வெளியில் விடுதலைப் புலிகள் அதிக எண்ணிக்கையிலான குறிசூட்டுப் படையினரை நிலைநிறுத்தியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.



இராணுவ வீரர்கள் தலைகளை உயர்த்தினால்கூட குறிசூட்டுப் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகும் நிலை காணப்பட்டதாகவும், இதனால் இராணுவத்தினர் இரவு நேரங்களையும் இருள் சூழ்ந்த காலங்களையும் பயன்படுத்தி தரையில் தவழ்ந்தவாறு மெதுவாக முன்னேற வேண்டியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட அந்தப் பகுதியை கடப்பதற்கு இராணுவத்திற்கு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் எடுத்ததாகவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், தமது படைப்பிரிவு போரின் போது சுமார் 202 கிலோமீற்றர் தூரம் முன்னேறிச் சென்று போரில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் சிறிய நாட்டில் இயங்கிய அமைப்பாக இருந்தபோதிலும், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட பீரங்கிகள், நவீன துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு குறிப்பிடத்தக்க இராணுவ பலத்தை உருவாக்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்டு எறிகணைகள்’, 82 மில்லிமீற்றர் மோட்டார்கள் மற்றும் கிளேமோர் கண்ணிவெடிகள் போன்ற ஆயுதங்களைத் தாங்களே தயாரித்துப் பயன்படுத்தும் திறனை கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், போரின் இறுதி கட்டத்தில் தாக்குதல் படைகள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி இராணுவத்துக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரின் கடைசி ஏழு நாட்கள் இராணுவத்துக்கு மிகவும் கடுமையான காலகட்டமாக இருந்ததாக சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய தாக்குதலின்போது ஏற்பட்ட வெடிப்பில் தனது ஒரு காதின் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டதாகவும், தனது உடலில் இன்னமும் 32 வெடிகுண்டுத் துகள்கள் இருப்பதாகவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Advertisement

போர்க்களத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், சர்வதேச அரங்கில் பரப்புரை நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவத்துக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் பயணத் தடைகள், விசா மறுப்புகள் மற்றும் நிதி முடக்கங்கள் போன்ற நடவடிக்கைகள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவை போருக்குப் பின்னர் தாம் எதிர்கொண்ட முக்கிய சவால்களில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: