News Just In

8/22/2026 06:45:00 AM

எல் நினோ வறட்சி அச்சுறுத்தல்: நீர் விநியோகச் சட்டங்களில் உடனடி திருத்தங்கள்!

எல் நினோ வறட்சி அச்சுறுத்தல்: நீர் விநியோகச் சட்டங்களில் உடனடி திருத்தங்கள்!


நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 25,563 குடும்பங்களைச் சேர்ந்த 81,605 நபர்கள் கடுமையான நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் தெரிவித்துள்ளது.

அம்பாறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை இந்த வறட்சியான வானிலை கடுமையாகப் பாதித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ நிகழ்வுகளால் எழக்கூடிய வறட்சி நிலைமைகளை எதிர்கொள்வதற்காக, தடங்கலின்றி நீரை வழங்குவதையும் விரைவான நடவடிக்கைகளை எடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு பாதுகாப்பு அமைச்சினால் ஆகஸ்ட் 6 ஆம் திகதி சிறப்புச் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்காக நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

போத்தல் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்காக நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் நீரின் அளவு 6 லீட்டரிலிருந்து 15 லீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீரை விநியோகிப்பதற்காக தற்போது 324 நீர் பௌசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தேவைக்கு ஏற்ப பிரதேச செயலாளர்கள் அல்லது பாதுகாப்புப் படையினரின் நீர் பௌசர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வறட்சியினால் ஏற்படும் பேரிடர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், இனிவரும் காலத்தில் ஏற்படக்கூடிய மழைக்கால நிலைமைகளை எதிர்கொள்வதற்கும் தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 4.8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments: