News Just In

7/03/2026 04:04:00 PM

ஆளுநருக்கு உரிமையும் கடமையும் உண்டு: அமைச்சர் நிர்மல் குமாருக்கு பாஜக பதில்

ஆளுநருக்கு உரிமையும் கடமையும் உண்டு: அமைச்சர் நிர்மல் குமாருக்கு பாஜக பதில்



 ‘அமைச்சர் நிர்மல் குமாருக்கு முதல்வர் விஜய் தக்க அறிவுரை வழங்குவதோடு, அரசியலமைப்பு சட்டத்தையும், ஆளுநரையும் மதித்து நடக்குமாறு பணிக்க வேண்டும்’ என தமிழக பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசியலமைப்பு பொறுப்பில் உள்ளவர் ஆளுநர். மக்களைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எடுத்துரைக்க வேண்டிய உரிமையும், கடமையும் ஆளுநருக்கு உண்டு” என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் நேற்று மதுரைக்கு சென்றிருந்தபோது, வைகை ஆற்றின் பரிதாப நிலையைக் கண்டு அதிர்ந்து போய், அதை மீட்டெடுக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிரான அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் விமர்சனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆளுநர் வைகை ஆற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, 'ஆறு இருக்கிறது, நீர் எங்கே?' என்று கேட்டு, மதுரை இளைஞர்களை தேசப்பற்றுடன் அதை மீட்டெடுக்குமாறு வலியுறுத்தினார். யாரும் முன்வராவிட்டால் ஆளுநர் அலுவலகம் தானே களமிறங்கும் என்று இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இது சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த மிக முக்கியமான, வரவேற்கத்தக்க நடவடிக்கை.

ஆனால், தனது சொந்த தொகுதியான திருப்பரங்குன்றம் உள்ள மதுரையில் இந்தப் பிரச்சினையை சுட்டிக்காட்டிய ஆளுநருக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார் 'அரசுத் திட்டங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை' என்று விமர்சித்திருப்பது அவரின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை, முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகிறது.

இந்த விமர்சனமானது தவெக அரசின் பாதுகாப்பின்மையையும், தங்களுக்கு எதிரான எந்தக் குரலையும் ஏற்றுக்கொள்ள முடியாத தவெக அரசின் மனப்பான்மையையும் காட்டுகிறது.

அரசியலமைப்பு பொறுப்பில் உள்ளவர் ஆளுநர். மக்களைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எடுத்துரைக்க வேண்டிய உரிமையும், கடமையும் ஆளுநருக்கு உண்டு. தண்ணீர் பற்றாக்குறை, மாசு, சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றால் மதுரை மக்கள் பாதிக்கப்படும் நிலையில், அமைச்சர் தனது அதிகார ஆணவத்தை முன்னிறுத்தி ஆளுநரை கண்டிப்பது மிகவும் வருந்தத்தக்கது.

இத்தகைய அறிக்கைகள் ஆளுநர் - மாநில அரசு இடையிலான இடைவெளியை அதிகரிக்கின்றன. மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் வைகை மீட்டெடுப்புப் பணியில் உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பிரச்சினையை சுட்டிக்காட்டுபவர்களைத் தாக்குவது சரியல்ல. அதிகாரத்திற்கு வந்த பின்னர், நிர்மல் குமார் பேச்சில் தொடர்ந்து ஆணவம் தலை விரித்தாடுவதை நாம் காண முடிகிறது.

அமைச்சர் நிர்மல் குமாருக்கு முதல்வர் விஜய் தக்க அறிவுரை வழங்குவதோடு, அரசியலமைப்பு சட்டத்தையும், ஆளுநரையும் மதித்து நடக்குமாறு பணிக்க வேண்டும்.

அமைச்சர் நிர்மல் குமார் தன் அதிகார மமதையை கைவிட்டு, வைகை ஆற்றை மீட்டெடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் சாக்குப் போக்குகளையும், ஆணவ அரசியலையும் புறந்தள்ளி உண்மையான தீர்வுகளையே எதிர்பார்க்கிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments: