மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறு போகச் செய்கையில் விளைவிக்கப்பட்ட நெல் கொள்வனவு கிரமமாக இடம்பெற்று வருவதாக விவசாய அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக்கான இணைப்பாளர் கி. திலகநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபுவின் தலைமையில் மட்டக்களப்பு - முள்ளாமுனை நெல் களஞ்சியசாலையில் அரசு அறிவித்த நிர்ணய விலையில் நெல் கொள்வனவு திங்களன்று துவங்கியது.
நெல்லை விவசாயிகளிடமிருந்து வாங்கும் ஆரம்ப நிகழ்வில் வவுணதீவு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி, விவசாய அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக்கான இணைப்பாளர் கி. திலகநாதன், பொலொன்னறுவை மாவட்ட நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரி அதுல உடபமுனுவ, நெல் சந்தைப்படுத்தல் அதிகாரி வடிவேல் ரஜீதரன் உட்பட நெற்செய்கை விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
அறுவடை செய்யப்பட்ட நெல்லை, நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்து வருகின்றது.
நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் காணப்படும் 1 கிலோ நாடு நெல்லுக்கு நாடு- 120 ரூபாவும், சம்பா 130 ரூபா, கீரி சம்பா 140 ரூபாவுக்கும் என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு வசதியாக இலுப்படிச்சேனை, வவுணதீவு, முள்ளாமுனை, மணல்பிட்டி, வெல்வாவெளி, தும்பங்கேணி ஆகிய பகுதிகளில் நெல்கொள்வனவு களஞ்சியசாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 38,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெல் செய்கை இடம்பெற்றுள்ளது
No comments: