
வத்தளை, கதிரான – பள்ளியவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இரு பெண்கள் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவலில் வைக்க அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தும் வகையில், ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று இரவு வத்தளை, பள்ளியவத்தை பகுதியில் உள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றில் நடைபெற்ற விருந்தின் போது, ஆயுததாரி ஒருவர் திடீரென புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.
ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் மட்டக்குளியைச் சேர்ந்த 'குடு ரொஷான்' என்பவரை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், தாக்குதல் இலக்குத் தவறியதால், அவருக்கு அருகில் இருந்த 39 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
No comments: