News Just In

6/17/2026 07:21:00 AM

மருதமுனைக்கு தனியான நகர சபை கோரி அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் குரல்!

மருதமுனைக்கு தனியான நகர சபை கோரி அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் குரல்



நூருல் ஹுதா உமர்

மருதமுனை மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் தனியான நகர சபை அமைக்கும் முயற்சியை துரிதப்படுத்தும் நோக்கில், மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (16) இரவு தனியார் விடுதியில் ஏற்பாடு செய்து தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளது.

மருதமுனையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அமையத்தின் பிரதான செயற்பாட்டாளர்களான எம்.ஐ.எம். முஹர்ரப் மற்றும் பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸீல், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் ஆகியோர், மருதமுனை பிரதேசத்திற்குத் தனியான நகர சபை அமைப்பதற்கான அனைத்து தகுதிகளும் இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, கல்முனை கரைவாகு மேற்கு மற்றும் பட்டின சபை என நான்கு தனித்தனி நிர்வாக அலகுகளாக இயங்கி வந்த பகுதி, பின்னர் ஒன்றிணைக்கப்பட்டு கல்முனை பிரதேச சபையாகவும், அதன் பின்னர் கல்முனை மாநகர சபையாகவும் தரமுயர்த்தப்பட்டது என்றனர்.

முன்னர் கல்முனை கரைவாகு வடக்கு கிராம சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்ட மருதமுனை, தற்போது தனியான நிர்வாக அலகு ஒன்றைப் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கான கோரிக்கையை மருதமுனை மக்கள் நீண்டகாலமாக முன்வைத்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில், மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் அண்மையில் கூடி, தனியான நகர சபை கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், அதன்படி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக முன்னாள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவை சந்தித்து ஆலோசனைகளும் அனுபவங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் ஒத்துழைப்பைப் பெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.

மருதமுனையில் காணப்படும் மக்கள் தொகை, நிலப்பரப்பு, வர்த்தக நிலையங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் நிர்வாக வளங்கள் என்பன தனியான நகர சபை ஒன்றை அமைப்பதற்கான போதுமான அடிப்படைகளை வழங்குவதாகவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், தற்போது கல்முனை மாநகர சபையின் கீழ் கிடைக்கும் சேவைகள் போதுமானதாக இல்லாத நிலையில், மருதமுனைக்கு தனியான நிர்வாக அலகு உருவாக்கப்பட்டால் வீதிகள், வர்த்தக கட்டமைப்புகள் மற்றும் உள்ளூர் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாகவும் திறம்படவும் முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதிகாரப் பகிர்வு மற்றும் பிராந்திய அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளித்து வரும் இக்காலகட்டம், மருதமுனையின் கோரிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்கச் சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மருதமுனையில் இயங்கி வரும் 21 பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அனைத்து பள்ளிவாசல்கள் அமையம், இந்த முயற்சியை அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பொதுநல நோக்கத்துடன் முன்னெடுத்து வருவதாகவும், கல்வியாளர்கள், சட்டத்தரணிகள், நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தது.

மருதமுனையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் மக்களின் நிர்வாகத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தனியான நகர சபை அமைக்கும் கோரிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என அமையத்தின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதன்போது சட்ட ஏற்பாடுகள் மற்றும் நகரசபை கோரிக்கைக்கான வாய்ப்புக்கள் தொடர்பில் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் விரிவாக விளக்கமளித்தார்.

No comments: