News Just In

6/18/2026 02:30:00 PM

மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு முன் அதாஉல்லா தமது நிர்வாகத்தைப் பார்க்க வேண்டும்!

மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு முன் அதாஉல்லா தமது நிர்வாகத்தைப் பார்க்க வேண்டும் – அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சபூர் ஆதம்


நூருல் ஹுதா உமர்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது வெறும் மேடைப் பேச்சுகளிலும் விளம்பர நிகழ்வுகளிலும் மட்டுப்படாமல் நடைமுறையிலும் வெளிப்பட வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சபூர் ஆதம் வலியுறுத்தியுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் அண்மைய அமர்வில் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நிர்வாகத்தின் கீழ் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத நிலை தொடர்வது கவலைக்குரிய விடயமாகும் என தெரிவித்தார்.

அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரிமியர் லீக் போட்டித் தொடரை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் இதுவரை கழிவறை வசதி ஏற்படுத்தப்படாதிருப்பதை சபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகக் கூறினார்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்தப் பிரச்சினை குறித்து சபையில் சுட்டிக்காட்டியிருந்த போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக இளைஞர்கள் மைதான மதில்கள் மற்றும் புல்வெளிப் பகுதிகளைப் பயன்படுத்தும் நிலை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அக்கரைப்பற்று பொதுச் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்குத் தேவையான கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்ததையும் அவர் நினைவூட்டினார்.

“மக்கள் பயன்படுத்தும் பொது இடங்களில் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவது என்பது வெறும் கட்டுமானப் பணியல்ல. அது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் மனித கண்ணியத்துடன் தொடர்புடைய அடிப்படை பொறுப்பாகும். எனவே மற்றவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உபதேசம் செய்வதற்கு முன் தமது நிர்வாகத்தின் கீழ் உள்ள இடங்களின் நிலைமைகளை முதலில் சீரமைக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

தனது கோரிக்கைகளைத் தொடர்ந்து, பொது விளையாட்டு மைதானத்திற்கும் பொதுச் சந்தை பள்ளிவாசலிற்கும் தேவையான கழிவறை வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகர முதல்வர் சபையில் உறுதியளித்துள்ளதாகவும் சபூர் ஆதம் தெரிவித்தார்.

மக்களின் அன்றாட தேவைகளை அடையாளம் கண்டு அவற்றை சபையின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தப் பொறுப்பை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments: