கல்முனை: கல்முனை பிரதேசத்தின் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் (29) சந்தாங்கேணி மைதானத்தில் உற்சாகமான சூழலில் நடைபெற்றது.
கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் என்.எம். அப்ரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.அஸீம் ஒருங்கிணைத்திருந்தார். பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் டபிள்யூ. ஏ. கங்கா சாகரிக்கா, உதவிப் பணிப்பாளர் ஏ.முபாரக் அலி, கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் எம்.ஐ.எம். சாதிக், அஸ்ஜா டிராவல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அல்-ஹாஜ் நஃப்ரீஸ் முகமட் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் யு.எல். றியால் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இறுதிநாள் நிகழ்வில் இடம்பெற்ற தடகள போட்டிகள் பெரும் விறுவிறுப்புடன் நடைபெற்றதுடன், இளைஞர்கள் தங்களது விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அதிதிகளால் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் கல்முனை பிரதேச போட்டிகள் வெற்றிகரமாக நிறைவுற்றன.
No comments: