News Just In

5/20/2026 01:08:00 PM

அம்பாறை களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ள 50,000 மெட்ரிக் டொன் நெல்லை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

அம்பாறை களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ள 50,000 மெட்ரிக் டொன் நெல்லை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாராளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல்





நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தின் நெல் களஞ்சியசாலைகளில் நீண்டகாலமாக குவிந்து கிடக்கும் சுமார் 50,000 மெட்ரிக் டொன் நெல்லை உடனடியாக அகற்ற அல்லது மாற்றுவதற்கான அவசர நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூல விவாதம் கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (19.05.2026) நடைபெற்ற போது உரையாற்றிய அவர், தேசிய அளவில் 22 சதவீதத்திற்கும் அதிகமான நெல் உற்பத்தியை வழங்கும் முக்கிய மாவட்டமாக அம்பாறை விளங்குவதாக குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட தொடர் வெள்ளப் பாதிப்புகளால் அம்பாறை மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கடந்த வருடம் விவசாயிகளிடமிருந்து நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 50,000 மெட்ரிக் டொன் நெல் தற்போது மாவட்டத்தின் பல்வேறு களஞ்சியசாலைகளில் தேக்கமடைந்து கிடப்பதாக சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் இப்போக நெல் அறுவடை ஆரம்பமாகவுள்ள நிலையில், தற்போது களஞ்சியசாலைகளில் சேமிக்கப்பட்டுள்ள நெல்லை அகற்றாதிருப்பது பாரிய சிக்கலை உருவாக்கும் என அவர் எச்சரித்தார்.

சம்மாந்துறை, மல்வத்தை, நாவிதன்வெளி, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, தம்பட்டை, சாகாமம், பொத்துவில், பாணம, லவ்கல, தெஹியத்தகண்டி, பதியத்தலாவ மற்றும் தமண உள்ளிட்ட பகுதிகளில் உள்ள களஞ்சியசாலைகளில் மொத்தமாக 50,000 மெட்ரிக் டொன் நெல் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, களஞ்சியங்களில் உள்ள நெல்லை உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்றுதல், அரிசியாக மாற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் மற்றும் களஞ்சிய இடவசதிகளை விரிவுபடுத்துதல் போன்ற அவசர நடவடிக்கைகளை விவசாய அமைச்சும் நிதி அமைச்சும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.

தேசிய ரீதியில் அதிகளவான நெல் கையிருப்புகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அறுவடை காலம் நெருங்கிவருவதால் களஞ்சியங்களில் உள்ள நெல் கையிருப்புகளை அகற்றுவதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல்லும் விரைவில் அகற்றப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

No comments: