News Just In

2/18/2026 08:43:00 AM

மாகாணசபை தேர்தலை ஒரு வருடம் பின்போடுவதை அதிரடியாக தடுத்த சாணக்கியன்..!

மாகாணசபை தேர்தலை ஒரு வருடம் பின்போடுவதை அதிரடியாக தடுத்த சாணக்கியன்..!


அரசின் அமைச்சர் விமல் ரட்னாயக்க மற்றும் ரவி கருணாநாயக்க அவர்களின் மாகாண சபை எதிர்ப்பு திட்டத்தை முறியடித்த பாராளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன். நேற்றைய  தினம் 17.02.2026 மாகாணசபை தேர்தல் தொடர்பான விவாதத்தின் போது.

மாகாணசபை தேர்தலை மேலும் தாமதப்படுத்தக் கூடிய வாய்ப்புகளை குறைக்கும் வகையில், பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது தமிழரசுக் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற குழுத் தலைவர் இராசமாணிக்கம் சாணக்கியன் முக்கியமான எதிர்ப்பை முன்வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைத்திருந்த தெரிவுக்குழு அமைக்கும் யோசனையில், ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுடன் மாகாணசபை தேர்தலும் சேர்க்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சாணக்கியன்,

“மாகாணசபை தொடர்பாக ஏற்கனவே ஒரு பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதே விடயங்களை மீண்டும் ஆய்வு செய்ய மற்றொரு தெரிவுக்குழுவை அமைப்பது சட்ட ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும். இரண்டு தெரிவுக்குழுக்கள் ஒரே தேர்தல் முறைமை குறித்து அறிக்கை அளிக்கும் போது, எந்த அறிக்கையை பாராளுமன்றம் ஏற்க வேண்டும் என்பது குறித்து குழப்பம் உருவாகும்,” என்று வலியுறுத்தினார்.

அவர் மேலும், மாகாணசபை தேர்தல் குறித்து மீண்டும் ஆய்வு செய்ய புதிய குழு அமைப்பது தேர்தலை மேலும் தாமதப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். அரசாங்கம் மாகாண சபை தேர்தலை பிற்போட இந்த தெரிவுக்குழுவை ஒரு காரணமாக பயன்படுத்தக்கூடும் என்பதால் அதற்கு இடமளிக்க முடியாது எனவும் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

இதையடுத்து சபையில் ஆளும் தரப்பும் எதிர்க்கட்சிகளும் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது. பின்னர், மாகாணசபை என்ற சொல் யோசனையிலிருந்து நீக்கப்பட்டபின் மட்டுமே அந்த முன்மொழிவுக்கு இணக்கம் அளிக்க முடியும் என சாணக்கியன் தெரிவித்தார்.

இறுதியில், பல வாதங்களுக்குப் பிறகு, மாகாணசபை குறித்த பகுதி நீக்கப்பட்ட நிலையில் யோசனை முன்னேறியது. அதன் அடிப்படையில், மாகாணசபை தேர்தல் முறைமையை தவிர்த்து, ஏனைய தேர்தல் முறைமைகள் குறித்து மட்டும் ஆய்வு செய்ய தெரிவுக்குழு நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் இன்று காலை நான் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் முஸ்தபா அவர்களுடனும் கலந்துரையாடி இருந்தேன்.

தமிழ் அரசியல் பரப்பில் மாகாணசபை தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சிக்கு எதிரான எமது இம்முயற்சி,நேற்றைய  தினம் சாணக்கியனின் நிலைப்பாட்டால் வெற்றி பெற்றுள்ளது.

No comments: