News Just In

4/23/2026 05:16:00 AM

பாடசாலைக்கு அருகில் வாகனங்கள் கழுவி சுத்தம் செய்யும் நிலையம் (Service Station) அமைப்பதற்கு எதிர்ப்பு!

பாடசாலைக்கு அருகில் வாகனங்கள் கழுவி சுத்தம் செய்யும் நிலையம் (Service Station) அமைப்பதற்கு எதிர்ப்பு!
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாறக்கிடம் மகஜர் ஒன்றும் கையளிப்பு!



அபு அலா
குச்சவெளி பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட இக்பால் நகர் பாடசாலைக்கு அருகாமையில், வாகனங்கள் கழுவி சுத்தம் செய்யும் நிலையம் (Service Station) அமைப்பதற்கான முயற்சிகளுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளரின் சிபாரிசுக்கமைவாக இந்த முன்னெடுப்பு இடம்பெற்று வருவதை அறிந்து, கிழக்கு மாகாண ஆளுநரை நேரடியாகச் சந்திக்க திருகோணமலை ஆளுநர் செயலகத்திற்கு சென்றபோது, ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் எங்களை சந்திக்க விடாது அவரே பதில் வழங்கி திருப்பியனுப்பி விட்டார் என்றும் அதற்கான அனுமதியை தவிசாளராகிய நீங்கள் வழங்கக்கூடாதெனவும், அந்த செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிய மகஜர் ஒன்றும் தவிசாளர் ஏ.முபாறக்கிடம் கையளித்து வைக்கப்பட்டது.

குறிப்பாக, பாடசாலைக்கு அருகில் இவ்வாறான நிலையம் அமையப் பெருவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கும் பெரும் இடையூறாக அமையுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டதுடன், வாகனங்கள் கழுவி சுத்தம் செய்யும் நிலையம் அமையுமாக இருந்தால் பாரிய ஆர்ப்பாட்டமொன்றேயும் எடுப்போம் என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பான சந்திப்பும், கலந்துரையாடலும் இன்று (22) குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிவாசல் நிருவாகத்தினர், பாடசாலை அதிபர், கிராமிய அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விடயம் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஒரு குழுவை தவிசாளர் நியமித்து, அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென தவிசாளர் உறுதியளித்தார்.மேலும், இன்றைய சபை அமர்வில் இவ்விடயத்தை உடனடியாக ஆராய வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் பிரதேச சபையின் செயலாளர், உதவி தவிசாளர், உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த மகஜரின் பிரதிகளை கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட உதவி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments: