
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பௌத்த பிக்குகள் 22 பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில், பௌத்தப்பிக்குகள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைப்பற்றப்பட்ட அதி கூடிய போதைப்பொருள் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு விடயங்கள் அம்பலமாகியுள்ளன.
இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையின் பின்னணியில் மூன்று பௌத்தப்பிக்குகள் செயற்பட்டு உள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 110 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதை பொருள் மற்றும் ஹாஷ் போதை பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இந்த பௌத்த பிக்குகள் கடந்த 22 ஆம் திகதி தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கு சென்றுள்ளனர்.
கஷ்டப் பிரதேச விகாரைகளில் உள்ள இளம் பௌத்த பிக்குகளை தெரிந்தெடுத்து தாய்லாந்துக்கான மத வழிபாட்டு யாத்திரை என்ற போர்வையில் போதைப் பொருள் கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை மூன்று பௌத்தப்பிக்குகள் வழி நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பௌத்தப்பிக்குகள் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவி உடைகளை களைந்து பல்வேறு களியாட்ட நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுடைய அலைபேசிகளை பார்க்கும் போது இந்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. சில பௌத்தப்பிக்குகள் பெண்களுடன் தகாத தொடர்பு பேணியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
மூன்று நாட்கள் அங்கு தங்கி இருந்து பல்வேறு களியாட்டங்களில் இந்த பௌத்தப்பிக்குகள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
பிரதான சந்தேக நபர்
இந்த மூன்று பௌத்தப்பிக்குகளும் அழைத்துச் செல்லப்பட்ட பௌத்தப்பிக்குகளிடம் டாபி, சாக்லேட் சவர்க்காரம், ஷாம்பூ, பற்பசை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றை தருவதாகவும் இது கஷ்டப்பிரதேச விகாரைகளுக்கு வழங்கப்பட வேண்டியது எனவும் கூறியுள்ளனர்.
பொதிகளை திறக்காது கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பொதிகளில் சுமார் ஐந்து கிலோ கிராம் எடையுடைய போதைபொருட்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கை குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் விமான நிலையத்தில் வைத்து சோதனை நடத்தப்பட்டு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையை திட்டமிட்டு வழிநடத்தியதாக கூறப்படும் மூன்று பௌத்தப்பிக்குகளும் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் தாய்லாந்துக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையை வழி நடத்திய பிரதான சந்தேக நபரான பௌத்த பிக்கு ஒருவரை கம்பஹா மீகாவத்த பகுதியில் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த பௌத்தப் பிக்கு தாய்லாந்துக்கு செல்லவில்லை எனவும் அவர் இங்கிருந்து இந்த போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையை வழிநடத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: