சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் டெங்கு உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய முகாம் பகுதியில் அமைந்துள்ள மத்திய முகாம் மஸ்ஜிதுல் முகம்மதிய்யா ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
ஆரோக்கியமான மற்றும் சுத்தமான சூழலை உருவாக்குவதுடன், எதிர்வரும் ரமலான் மாதத்தை வரவேற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இச்சிரமதானப் பணி பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பள்ளிவாசல் வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தேங்கி இருந்த குப்பைகள் அகற்றப்பட்டதுடன், நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்களும் சுத்தம் செய்யப்பட்டது.
இச்சிரமதானப் பணிகள் முதற்கட்டமாக ஜும்மா பள்ளிவாசலை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் மத்திய முகாம் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ. நளீர், மத்திய முகாம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தன்னார்வமாக செயல்பட்டனர்.
சமூக ஒருங்கிணைப்பின் மூலம் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் இம்முயற்சி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
No comments: