News Just In

12/08/2025 08:55:00 PM

அம்பிட்டிய தேரரை இதுவரை கைது செய்யாதது ஏன்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அம்பிட்டிய தேரரை இதுவரை கைது செய்யாதது ஏன்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு



தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என் கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டது.

அவரை எதிர்வரும் 15 திகதிக்கு முன்னர் முன்னிலைப்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (8) பொலிசாருக்கு உத்தரவிட்டதுடன் இது வரை ஏன் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வில்லை என்பதை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டார்.

கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த தேரர் தெரிவித்த இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் ( (International Covenant on Civil and Political Rights ) ) சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறத்தல் வழங்கியது.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை (08) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குறித்த தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணி சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி குறித்த தேரரை இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.

No comments: