(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மைக் குழுக்களின் அரசியல் பிரசன்னம் மற்றும் அதற்கான சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் வாழ்கின்ற நலிவுற்ற நிலையிலுள்ள சிறுபான்மை சமூகக் குழுக்களின் அரசியல் பங்குபற்றுதல், அதற்காக அவர்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்ற சவால்கள், தடைகள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளுராட்சி மன்றச் செயலாளர்கள் மற்றும் நலிவுற்ற சிறுபான்மை சமூகக் குழுக்களின் பிரதிநிதிகளான பெண்கள் இளைஞர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எல்.எம்.புஹாரி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் உள்ளுராட்சி மன்றங்களில் தொடர்ந்தும் பிரதிநிதித்துவம் அற்றவர்களாகக் காணப்படுகின்ற ஓரங்கட்டப்பட்டுள்ள சிறுபான்மைக் குழுக்களின் பிரதிநிதிகள், குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் முக்கியத்துவப்படுத்தப்பட்டனர்.
உள்ளக ஆட்சிக்கான அரசியல் தளத்தில் வினைத்திறன் மிக்க வகையில் பங்குபற்றுவதற்குள்ள தனிப்பட்ட, சமூக சவால்கள் அல்லது தடைகள், அவர்களது தீர்க்கப்படாத அடிப்படைப் பிரச்சினைகள் ஆகியன அக்குழுக்களின் பிரதிநிதிகளாலேயே அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கலந்துரையாடலில் பொதுக் கருத்து எட்டப்பட்டது.
எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளால் அவை எவ்வாறு களையப்படலாம் அல்லது குறைக்கப்படலாம் என்பது பற்றியும், இப்பிரச்சினைகளுக்கான நீடித்திருக்கக்கூடியதும் சாத்தியமானதுமான தீர்வுகளுக்கான முயற்சிகளை உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் இக்குழுக்களையும் இணைத்துக் கொண்டு எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலின் முடிவில், கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மைக் குழுக்களின் பிரதிநிதிகளோடு இணைந்து தயாரித்;துள்ள பரிந்துரைகளோடு கூடிய பரப்புரைப் பத்திரம் ஒன்றினை உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன், எதிர்காலங்களில் இக்குழுக்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் சிறுபான்மை உரிமைகள் குழு சர்வதேசத்துடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய நிதி அனுசரணையுடன் “இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்துக்காக சிறுபான்மையினரை வலுவூட்டல்” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு சமூக பொருளாதார காரணிகளால் ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மைக் குழுக்களுக்கு ஆதரவாக குரலெழுப்பும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.
No comments: