News Just In

7/15/2025 05:25:00 PM

எக்னலிகொட சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டேன்! முன்னாள் கடற்படை வீரர் அதிர்ச்சி வாக்குமூலம்

எக்னலிகொட சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டேன்! முன்னாள் கடற்படை வீரர் அதிர்ச்சி வாக்குமூலம்



2010 ஆம் ஆண்டு கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட சுட்டுக் கொல்லப்பட்டதையும் அவரின் சடலத்தையும் தான் கண்டதாகவும் அச்சந்தர்ப்பத்தில் அங்கு இருந்தாக நியூசிலாந்தில் தற்போது வசிக்கும் முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறித்த திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகவியலாளர் ஒருவர் நடத்தும் குறித்த நிகழ்ச்சியில் தொலைபேசி வாயிலாக இணைந்துகொண்டு போது பல விடைதெரியா முடிச்சுகளை கடற்படை வீரர் கட்டவிழ்த்துள்ளார்.

பிரசன்ன பியசாந்த என்ற முன்னாள் கடற்படை வீரர் 2018 ஆம் ஆண்டு இறுதியில் நியூசிலாந்துக்கு தொழில் விசாவில் சென்று அரசியல் தஞ்சம் கோரிய நிலையில் இன்று நியூசிலாந்து நாட்டு பிரஜையாக உள்ளார்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற 2 நாட்களுக்கு முன் ஊடகவியலாளர் எக்னலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டார். தற்போது 15 வருடங்கள் கடந்துவிட்டன.

இந்த நிலையில், தான் 2010ஆம் ஆண்டு திருகோணமலை டொக்யாட்டில் கடமையாற்றும் போது இரவு 8 மணிக்கு தனக்கு அழைப்பு வந்ததாகவும், அதன் பின்னர் இரவு 11 மணிக்கு, கொமோன்டோ ரவீந்திர விஜயபுர ஆணையின் படி கொழும்பு கடற்படை தலைமையகத்துக்கு கெப் வாகனத்தில் தான் அழைத்து வரப்பட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

தனக்கு சரியான திகதிகள் ஞாபகமில்லை எனவும், குறிப்பாக பெப்ரவரி 01 அல்லது 02 ஆம் திகதிகளில் இவை நடந்திருக்கலாம் எனவும் அந்த கடற்படை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் குறிப்பிடுகையில்,

தலைமையகத்திற்கு வந்த அன்று இரவு என்னை மீள கெப்வண்டியில் ஏற்றிக் கொண்டு பொப்பிலியான சுநேத்திரா தேவி பிரிவெனா பகுதிக்கு வந்தவுடன் அங்கு கெப் வாகனம் நிறுத்தப்பட்டது.

அப்போது எனது வாகனத்துக்கு முன் கறுப்பு நிற கெப்வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வண்டியில் கண்கள் கைகள் கட்டப்பட்ட நபர் ஒருவரை ஏற்றினர். அதன் பின்னர் அந்த கெப்வண்டி அங்கிருந்து சென்றது. பின்னர் நாங்கள் வந்த கெப்வண்டி தலைமையகம் திரும்பி பின்னர் ஹபரண நோக்கி பயணித்தது

நாங்கள் செல்லும் போது எமக்கு முன்னால் குறித்த கறுப்பு நிற கெப் வண்டி சென்றது.

அதன் பின்னர் குறித்த கெப்வண்டியை நான் காணவில்லை. அப்போது நான் வந்த கெப்வண்டி மட்டக்களப்பு நோக்கி சென்று மட்டக்களப்பு கோட்டையை வந்தடைந்தது.



அங்கு குறித்த கெப்வண்டி நின்றதை நான் பார்த்தேன். அப்போது லெப்டினன் கொமாண்டோ பியந்த (கொத்து பியந்த) என்னுடன் வந்த நால்வரும் வெளியில் இறங்கி நின்றோம்.

கோட்டையில் இருந்த பாழடைந்த அறைக்கு கறுப்பு கெப்வண்டியில் கொண்டுவரப்பட்ட நபரை அதில் வந்தவர்கள் இழுத்து சென்றதை நான் பார்த்தேன்.

அதன் பின்னர் துப்பாக்கி வேட்டுச் சத்தம் அந்த அறையில் இருந்து எனக்கு கேட்டது. சில நிமிடங்களின் பின்னர் கொமோட்டோ பியந்த கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திர படகை எடுக்குமாறு சொன்னார்.

அங்கு மூன்று இந்திர படகுகள் காணப்பட்டது. அவர் காட்டிய படகை நான் இயக்கிய நிலையில் வைத்திருந்த போது சுட்டுக் கொள்ளப்பட்ட அந்த நபரை தூக்கி வந்து படகில் வைத்தனர்.

அப்போது நான் பார்த்ததில் அவரின் கழுத்தில் சூட்டு காயங்கள் காணப்பட்டன. பின்னர் என்னை அருகில் இருந்த தீவை நோக்கி படகை செலுத்தச் சொன்னார்கள்.

படகில் மண்வெட்டிகளும் இருந்தன. என்னை படகில் இருக்க சொல்லிவிட்டு சடலத்தை தூக்கிச் சென்று சில நிமிடங்களில் திரும்பி வந்தனர்.

பின்னர் நாங்கள் வந்த கெப் வண்டியில் திரும்பி வந்து விட்டோம். பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியான பின்னரே எனக்கு தெரியவந்தது. அன்று நான் பார்த்த சுட்டுக் கொள்ளப்பட்ட நபர் எக்னலிகொட என அறிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

No comments: