பிரதேச மக்களுக்கு உதவும் வகையில், வவுணதீவுப் பிரதேசத்தில் உதவு ஊக்க மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக சேர்க்கிள் (CIRCLE) எனப்படும் இளம் பெண்கள் அமைப்பின் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார்.
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வவுணதீவு, கல்குடா நரிப்புல்தோட்டம் மகிழவெட்டுவான் ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், இளைஞர்கள், யுவதிகளை உள்ளடக்கி அப்பிரதேச பரிந்துரை வலையமைப்பின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்ட கணனிப் பயிற்சி, காகிதாதிகள் விற்பனை, போட்டோ கொப்பி, பிரின்ரிங் உட்பட உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையம் திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இங்கு “பொன்” நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சேர்க்கிள் நிறுவனத்தின் அமுலாக்கத்தில் சுமார் 5 இலட்ச ரூபாய் பெறுமதியான உபகரணத் தொகுதிகள் பிரதேச பரிந்துரைப்புக் குழுவிடம் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி, சேர்க்கிள் அமைப்பினால் மாவட்டத்திலுள்ள ஏறாவூர்ப் பற்று, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை, வவுணதீவு ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் இளைஞர், யுவதிகள், பெண்கள் ஆகியோரிடையே நிலவும் தொழிலில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இத்தகைய வாழ்வாதாரத்திற்கான தொழிலூக்க உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாம் தொடர்ந்து முயற்சியைக் கைவிடாமல் இந்தப் பிரதேச மக்களுக்கான உதவிகளை மக்களின் காலடிக்குக் கொண்டு வந்து சேர்ப்பிப்பதில் உறுதியாக இருந்தோம். அது இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
எனவே இவற்றைப் பாதுகாத்து இத்திட்டத்தை முன்கொண்டு செல்ல வேண்டியது பிரதேச மக்களின் பொறுப்பாகும்.
இதன் நோக்கம் பரிந்துரை வலையமைப்பு தொடர்ந்து இயங்கி அதனூடாக பெண்கள், இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், பிரதேச மக்களின் பொருளாதாரம் வளமடைய வேண்டும், வாழ்வாதாரம் சிறப்படைய வேண்டும் என்பதேயாகும்.” என்றார்.
நிகழ்வில் மகிழவெட்டுவான் கந்தப்போடி வித்தியாலயத்தின் அதிபர் வி. ஏரம்பமூர்த்தி, நரிப்புல்தோட்டம் நடேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர் வி. மாதவன், சேர்க்கிள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஏறாவூர்ப்பற்று, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை, வவுணதீவு ஆகிய பிரதேசங்களிலுள்ள பரிந்துரை வலையமைப்பின் உறுப்பினர்கள், சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் வெளிக்கள இணைப்பாளர்களான கே. ஜெயவாணி, எம்.எல். மாஜிதா, கே. லக்ஷானா ஆகியோருட்பட பரிந்துரை வலையமைப்பிலுள்ள பயனாளிகளும் கலந்து கொண்டனர்
No comments: