News Just In

4/22/2025 06:53:00 AM

அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளையும், பகட்டு கதைகளையும் நம்பி இன்னும் வாக்களிக்க மக்கள் தயாரில்லை - தலைமை வேட்பாளர் எம்.ஏ. நளீர்

அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளையும், பகட்டு கதைகளையும் நம்பி இன்னும் வாக்களிக்க மக்கள் தயாரில்லை - தலைமை வேட்பாளர் எம்.ஏ. நளீர்


நூருல் ஹுதா உமர்

நாவிதன்வெளியை இவ்வளவு காலமும் பொய்யான வாக்குறுதிகளையும், பகட்டு கதைகளையும் கூறி ஏமாற்றி வந்த அரசியல்வாதிகளை புறமுதுகு காட்டி ஓடவிடுமளவுக்கு நாவிதன்வெளி மக்கள் தெளிவாக இருப்பதுடன் ஊழல்களை செய்து கொண்டு இனவாதம் பேசிக்கொண்டு மக்களை ஏமாற்ற எத்தனிக்கும் அரசியல்வாதிகளுக்கும், அவர்களின் அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் மே 06 இல் நல்ல பாடம் கற்பிப்பார்கள் என நாவிதன்வெளி பிரதேச சபைக்கு கால்பந்து சின்னத்தில் சுயேட்சையாக தலைமை வேட்பாளராக போட்டியிடும் நளீர் பௌண்டஷன் நிறுவனர் எம்.ஏ. நளீர் தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச சபை வேட்பாளர் முஹம்மட் ஹலால் தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இன்னும் சில சில்லறை கட்சிகளும் சேர்ந்து கொண்டு தேர்தல் காலங்களில் இங்கு படையெடுத்து நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கி அவற்றை ஒருகாலமும் நிறைவேற்றாது ஏமாற்றும் வேலையையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். இவர்களின் ஏமாற்று அரசியலை நம்பி நாம் தொடர்ந்தும் இவர்களுக்கு வாக்களிக்க முடியாது.

அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளையும், பகட்டு கதைகளையும் நம்பி இன்னும் வாக்களிக்க மக்கள் தயாரில்லை என்பதை நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் தெளிவாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். நாவிதன்வெளி பிரதேசத்தை இருண்ட பிரதேசமாக தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது. எமது பிரதேச வளங்களை முழுமையாக பயன்படுத்தி அவற்றை கொண்டு மக்களின் வாழ்வியலை மேம்படுத்த தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் வென்றால் நிச்சயம் செய்வோம் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.

பொய்யான கதைகளை கூறி ஆட்சியை பிடித்த ஆளும் தரப்பினர் தோல்வியை அறிந்துகொண்டு இப்போது மேடைகளில் தடுமாற ஆரம்பித்துள்ளார்கள். எங்களிடம் எவ்வித தடுமாற்றங்களும இல்லை. அதிகாரமில்லாது நாங்கள் கடந்த காலங்களில் செய்து கொண்டிருந்ததை இப்போது அதிகாரத்துடன் செய்ய மக்களை நாடி வந்துள்ளோம். இதனை மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர். கடந்த காலங்களில் சர்வதேச உதவிகளை பெற்று நாவிதன்வெளி பிரதேச நிறைய உட்கட்டமைப்பை நாங்கள் செய்துள்ளோம். வீடமைப்பு, நீர்வழங்கல், மின்சாரம் வழங்கல், வாழ்வாதாரம் வழங்கல், உதவிங்களை வழங்குதல் என நிறைய சேவைகளை அதிகாரமில்லாமலே செய்துள்ளோம். அதிகாரம் கிடைக்கும் போது உத்வேகத்துடன் நிறைய பணிகளை மக்களுக்கு செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்.

இந்த கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் ஏ.கே. அப்துல் சமட், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம். சுவைதீன், நாவிதன்வெளி பிரதேச சபைக்கு கால்பந்து சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments: