News Just In

7/19/2024 05:14:00 PM

சுற்றாடலுக்கும் சுகாதாரத்திற்கும் பெரும் சவாலாக அமைந்துள்ள சாய்ந்தமருது தோணா!


( அஸ்ஹர் இப்றாஹிம்)
ஆறில்லாத ஊருக்கு அழகு பாழ் என்பார்கள் .கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சனத்தொகையை அதிகமாக கொண்ட பெரும் கிராமம் சாய்ந்தமருதாகும். கிழக்கே கடலையும் மேற்கே வயல் நிலத்தையும் தெற்கே மாளிகைக்காடு காரைதீவு பிரதேசத்தையும் வடக்கே கல்முனை மாநகரத்தையும் கொண்ட சாய்ந்தமருதினூடாக ஊடறுத்துச் செல்லும் தோணா மழை காலங்களிலும் வெள்ள காலங்களிலும் ஊர் தாழாமல் மேலதிகமான நீரை முகத்துவாரத்தினூடாக கடலில் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்கினை வகிக்கின்றது.

முன்னொரு காலத்தில் இந்த தோணா மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களது பொருளாதாரத்தையும் அதிகரிக்கும் ஒரு முதன்மையாக மூலாதாரமாக காணப்பட்டது. நாளடைவில் கரையோராமாக வாழ்ந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தோணாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்ததும் ஆறாகவிருந்த தோணாவின் பரப்பு ஓடையாக மாற ஆரம்பித்தது. இத்தோணாவை மேலும் பொது மக்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபா தோணவின் இருபுறமும் பாதைகளை அமைத்தார். அதன்பின்னர் தோணாவை ஆக்கிரமிப்பதற்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.

அழகான நீர் நிறைந்த பார்ப்போர் மனதில் ஆசையை உண்டுபண்ணிய இத்தோணா இன்று நீர்களைகள் வளர்ந்து புல்புண்டுகள் சூழ்ந்து விஷ ஜந்துக்களும் நுளம்புகளும் தொற்றுநோய் கிருமிகளும் வாழும் இடமாக மாறி இருப்பது இப்பிரதேச மக்களுக்கு மிகவும் மன வேதனையை அளிக்கின்றது.

சாய்ந்தமருது பிரதேச மக்கள் மட்டுமல்ல அயல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் தமது வீட்டுகழிவுகளையும் மிருக கழிவுகளையும் குப்பை கூளங்களையும் கொட்டும் கழிப்பிடமாக இதனை பயன்படுத்துகின்றனர். மழை பெய்யும் காலங்களில் இந்த தோணாவிலிருந்து வீசும் வெறுக்கத்தக்க மணம் இப்பிரதேசத்தையே ஆக்கிரமித்துக் கொள்ளும் . அந்த அளவு சகிக்க முடியாத வாடை அது.

தோணாவின் இருமருங்கிலும் குடியிருக்கும் மக்கள் நாளாந்தம் பலவிதமான சுவாச நோய்களுக்கும் தொற்று நோய்களுக்கும் உள்ளாகி வருவதுடன் இரவும் பகலும் நுளம்பு கடியிலும் தங்கள் வாழ்க்கையை நடாத்தி வருகின்றனர்.

தேர்தல்கள் நெருங்கும் போது மட்டும் தோணவை துப்பரவு செய்வதாகவும் அதனை மிகவும் அழகான சுற்றாடல் பொழுது போக்கும் பிரதேசமாகவும்இமாற்றுவதாக மேடைகளில் வாய்கிழிய வாக்குறுதி வழங்கி மக்களின் வாக்குகளையும் தோணா அபிவிருத்திக்காக வந்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு இடம்தெரியாமல் மாறி விடுகின்றனர்.

தோணாவை வைத்து பல வருடங்களாக உழைத்து வரும் ஒரு கூட்டம் அடுத்த தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கன்றது. குட்ட குட்ட குனிபவனும் மடையன் குனிய குனிய குட்டுபவனும் மடையன் என்பது போல் இதனை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் எவரும் இல்லாத நிலையில் தோணாவின் கதை தொடர்கதையாகின்றது.

தோணாவின் அதிகமான இடங்களில் நீர்களைகள் நிலத்துடன் வேரூண்றி மரமாக மாறியுள்ளது. சில இடங்களில் பெரிய புல்வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கின்றது. இந்த புல் புக்கும் காலத்தில் இப்புல் பு வெடித்து காற்றில் பறந்து செல்வதால் ஒரு வகை கடிநோய் ஏற்படுகின்றது. இத் தோணாவின் பக்கத்தில் பாடசாலைகள் , பொது நிறுவனங்கள் , மக்களிடம் வாழிடங்கள் , ஹோட்டல்கள் அமைந்து காணப்படுகின்றன. இப்புல் புண்டுகளை பிரதேச மக்கள் சிரமதானம் மூலம் அகற்றுவதற்கு எடுத்த முயற்சியும் கூட கைகூடவில்லை.

சுகாதார திணைக்களத்தை சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்களும் , பொலிஸாரும் இணைந்து வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்பு பரவும் சாதகமான நிலையில் காணப்படும் வகையில் தமது சூழலையும் வீட்டு சுற்றாடலையும் வைத்திருப்போருக்கு எச்சரிக்கையும் அதனையும் மீறுவோருக்கு தண்டப்பணமும் செலுத்துமாறு உத்தரவு பிறக்கின்றனர். ஆனால் பொதுமக்களின் வீடுகளில் காணப்படுவதனை விட எத்தனையோ மடங்கு டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இளநீர் குரும்பைகள் , பொலிதீன் பைகள் , பிளாஸ்டிக் போத்தல்கள் , வாளிகள் , உடைந்த சிதைந்த பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் , சிரட்டைகள் என்று எத்தனை வகையான பொருட்கள் இத்தோணாவில் வீசப்பட்டு காணப்படுவதுடன் இத்தோணாவில் வளர்ந்து காணப்படும் நீர்க்களையான சல்வீனியா , பிஸ்ரியா மற்றும் ஐக்கோணியா போன்ற தாவரங்களின் இலைகளுக்குள்ளும் நுளம்பு குடம்பிகள் காணப்படுவதனை இந்த வீடுகளுக்கு வரும் பொதுசுகாதார பரிசோதகர்களின் கண்களுக்கு புலப்பட ஏன் மறுக்கின்றது. இப்படியான சூழல் நிலமையினை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து இதற்கான தீர்வினை பெற தயங்குவது ஏன் .இப்படியான நிலமையை பேணி பாதுகாக்கும் கல்முனை மாநகசபையிடமிருந்து இதற்கான தண்டப்பணம் அறவிடப்பட வேண்டும் என பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தோணாவை பார்ப்பதற்கும் அதன் அருகில் வாழ்பவர்களையும் பேட்டி எடுப்பதற்கும் இதனை நாங்கள் மிக விரைவில் செய்து தருகின்றோம் என்று வாக்குறுதி வழங்குவதற்கும் வரும் அரசியல் வாதிகள் அந்த இடத்தை விட்டு அகன்று சென்றதும் நடப்பது புச்சியமாகத்தான் உள்ளது.

இந்த தோணாவிற்கு அருகில் வாழும் சித்தி சுபைதா கருத்து தெரிவிக்கையில் ,

இந்த தோணாவிற்கு அருகாமையில் எனது சிறு பராயத்திலிருந்தே வாழ்ந்து வருவதாகவும் இந்த தோணாவில் குளித்து பொழுது போக்கிற்காக விளையாடி மீன் பிடித்து விளையாடியதாகவும் இந்த மாளிகா வீதியில் மரப்பாலம் ஒன்று இருந்ததாகவும் வெள்ள காலத்தில் ஆறு பெருக்கெடுத்து ஓடுவது போல் இந்த தோணவில் நீர் ஓடுவதாகவும் இரவு பகல் என்று பாராது நூற்றுக்கணக்கானோர் இதில் மீன் பிடிப்பதாகவும் அவர்கள் பிடிக்கும்மீனை எனது பெற்றோர் வாங்கி கறிசமைத்து சாப்பிடுவதாகவும் கிடுகு பின்னுவோர் காய்ந்த ஓலைகளை இத் தோணாவில் சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் கிடுகு இழைத்து விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தைச் சேர்ந்த மேசன் தொழிலாளி முஹம்மது நௌசாத் கருத்து தெரிவிக்கையில் ,

இத்தோணவினால் தானும் தனது குடும்பத்தவர்களும் சுற்றத்தாரும் பலவிதமான சுற்றால் தாக்கங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் இரவுவேளைகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு நீரிப்பாம்புகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் மழைக்காலங்களில் துர்நாற்றம்வீசுவதாகவும் தெரிவித்தார் . சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இத் தோணாவிடயத்தில் கூடிய கவனம் செலுத்தி இம்மக்கள் எதிர்நோக்கும் சுற்றாடல் சவாலுக்கு மிக விரைவிலி நிதந்தரமான தீர்வொன்றினை பெற்றுதருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்

No comments: