News Just In

7/17/2024 07:17:00 PM

யாழ் போதனா வைத்தியசாலையில் ரமேஷ் பத்திரனவின் கலந்துரையாடலில் ஒருவர் அதிரடியாக கைது!



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுநர், சுகாதார துறை உயரதிகாரிகள், வைத்தியர்கள் பங்கேற்புடன் இன்று(17) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கூட்டத்தில் அநாமதேயமாக பங்கேற்ற ஒருவர் கலந்துரையாடலை முகநூல் வழியாக நேரலையில் ஒளிபரப்பியுள்ளார்.

இதனையடுத்து, முகநூல் நேரலை செய்யவேண்டாம் எனவும் அவரை அங்கிருந்து வெளியேறுமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் அதனை மறுத்து தொடர்ந்து அமர்ந்துள்ளார்.

இதன்போது, கூட்டநிறைவில் அங்கு சுகாதார அமைச்சருடன் பேச முற்பட்ட நிலையில் அமைச்சர் அங்கிருந்து செல்லவே, கூட்டத்தில் நின்ற அதிகாரிகளுடன் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, ஆளுநர் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடிய பிரதம செயலக அலுவலகத்தில் சென்று முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாவகச்சேரி பொலிஸார் குழப்பத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளனர்.

அத்துடன், சந்தேக நபரை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடலில் அநாமதேயமாக குறித்த நபர்பங்கேற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் அழையா விருந்தாளியாக பங்கேற்ற சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவும் முகநூல் நேரலை செய்தமையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments: