News Just In

5/04/2024 12:13:00 PM

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் ஏற்பாட்டில் சர்வதேச ஊடக சுதந்திரதின நிகழ்வு !

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கல்முனை கிளை தலைவர் மெளலவி முர்ஸித் (முப்தி) கெளரவிப்பு.


(எஸ்.அஷ்ரப்கான்)
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு சிலோன் ஜர்னலிஸ்ட் போரம் ஏற்பாடு செய்த நிகழ்வு கல்முனை அல்தாப் உணவகத்தில் நேற்று (03) மாலை இடம் பெற்றது.

போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ஜஃபர் ஜே.பி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்முனை கிளை தலைவர் மெளலவி ஏ.எல்.எம்.முர்ஷித் (முப்தி) ஸஹ்தி,நஜ்மி கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மெளலவி ஏ.எல்.எம்.முர்ஷித் (முப்தி),நம் எல்லோருடைய நோக்கமும் எமது மரணத்துக்கு முன்னால் இந்த சமூகங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே,நல்ல விடயங்களை செய்கின்றபோது நாம் புகழை எதிர்பார்த்து செய்வோமேயானால் அதற்கான உண்மையான கூலி எங்களுக்கு கிடைக்காது.

ஒரு ஊடகவியலாளர் என்பவர் நரகத்தையும் சம்பாதிக்கலாம். சொர்க்கத்தையும் சம்பாதிக்கலாம். முஸ்லிம் ஊடகவியலாளர்கள் என்பவர்கள் இறைவனுக்கு பயந்து சொர்க்கத்தை சம்பாதிக்க கூடிய வகையில் இந்த ஊடகத்துறையை எவ்வாறு பயன்படுத்தி சேவை செய்ய முடியுமோ அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். நல்ல விடயங்களை வெளிக்கொண்டு வர வேண்டும்.

குர்ஆன் சொல்கிறது, ஏதாவது ஒரு செய்தி உங்களிடம் வருகின்றதா அதனை தெளிவாக அறிந்ததன் பின் தான் அதனை வெளியிடுங்கள் என்று கூறுகிறது.
எண்ணிக்கையில் குறைவானவர்களாக நாம் இருந்தாலும் இளைஞர்கள் அனுபவசாலிகள் இருந்து கொண்டு நாங்கள் சமூகத்துக்கு நல்ல விடயங்களை செய்ய வேண்டும். நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆரம்ப கால இஸ்லாமிய பிரச்சாரத்தின்போது குறித்த சில நண்பர்கள் மாத்திரமே அவர்களுடன் இருந்தார்கள். ஆனால் இஸ்லாம் முழு உலகுக்கும் வியாபித்ததல்லவா? எனவே தான் நாங்கள் இஹ்லாஸோடு பொறுமையும் கவலையும் வைத்து செயற்படுவோமாக இருந்தால் எமது சேவைக்கான முழு பிரயோசனத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.


இங்கு பிரதம அதிதி மெளலவி ஏ.எல்.எம்.முர்ஷித் (முப்தி) சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தினால் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தின் நினைவாக நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் எஸ்.அஸ்ரப் கான், பொருளாளர் ஐ.ஏ.சிறாஜ், தவிசாளர் - றியாஸ் ஆதம் மற்றும் தேசிய அமைப்பாளர் எம்.ஏ.றமீஸ் உட்பட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

No comments: