யாழ்ப்பாணத்தில் தனியார் அமைப்பு ஒன்றினால் நடத்தப்பட்டு வரும் முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள முதியோர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
குறித்த காணொளி காட்சியில் ஆலயங்களில் சமைக்கப்படும் உணவுகளை குளிர்சாதனப் பட்டியில் வைத்து மறுநாள் சூடாக்கி முதியோர்களுக்கு வழங்கும் காணொளி அம்பலமாகியுள்ளது.
மேலும், இந்த நிறுவனத்தில் ஒரு முதியவரை அனுமதிக்க வேண்டுமானால் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் அறவிடப்படுவதுடன் மாதம் ஒன்றுக்கு ஒருவரிடம் எழுபது ஆயிரம் ரூபா பணம் அறவிடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால், முதியோர் இல்லத்தில் பல முதியவர்கள் பல்வேறு நோய்களுடன் காணப்படும் நிலையில் அவர்களுக்கு பழைய உணவுகளை பரிமாறி உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.
முறையற்ற செயற்பாடுகள்
அதுமட்டுமல்லாது குறித்த இல்லத்தில் கடமையாற்றுபவர்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) , ஊழியர் சேமலாப நிதி (ETF) கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் உள்ள பிள்ளைகள் தமது பெற்றோர்கள் குறித்த இல்லத்தில் நலமுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இங்கு இடம்பெறும் சம்பவங்கள் பெற்றோர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்காத நிலையில் காணப்படுகிறது.
மேலும், முதியோர் இல்லமானது பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்படாத இல்லம் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இவர்களின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக பிரதேச செயலகம் பதிவை வழங்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
No comments: