News Just In

2/29/2024 07:41:00 PM

வாழ்வாதாரத்துக்கான எமது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். மீறினால் தொடர் போராட்டத்துக்கு தயங்க மாட்டோம்!

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் தாஜுடீன்!


(எஸ்.அஷ்ரப்கான்)
எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலவரங்களின் காரணமாக எங்களது ஊழியர்கள் தங்களது வாழ்வை கொண்டுசெல்ல மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

ஒரே நிறுவனத்தின் பணியாற்றும் ஒரு தரப்பினருக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு, எங்களுக்கு வாக்குறுதி தந்து அரசு ஏமாற்றி வருகின்றது.
எங்களது விடயத்தில் அரசு பாகுபாடாக நடந்துள்ளமை அப்பட்டமான உண்மை.

இவ்வாறான நிலை நீடிக்குமாக இருந்தால் நாங்கள் தொடர் போராட்டம் ஒன்றுக்கு செல்வதைத்தவிர வேறு வழியில்லை என்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம், முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான இரு நாட்கள் கொண்ட அடையாள வேலை நிறுத்தத்தின் இரண்டாம் நாளான இன்று (29.02.2024) தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் தங்களது போராட்டத்தை சம்மாதுறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் நுழைவாயிலில் முன்னெடுத்தனர்.

கல்விசார ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் அவர்களின் தலைமையிலும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமிலின் வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தின் இரண்டாம் நாளிலும் பெரும் அளவிலான ஊழியர்கள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தின் காரணமாக இன்று 2024.02.29 ஆம் திகதி இடம்பெறவிருந்த 12 ஆவது சர்வதேச ஆய்வரங்கு அடுத்த தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றும் இடம்பெற்ற இப்போராட்டத்தில் வாக்களிக்கப்பட்ட 107% சம்பள அதிகரிப்பை வழங்கு, உறுதியளித்த 25% MCA கொடுப்பனவை வழங்கு என்பனபோன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இங்கு; ஒற்றுமையே பலம், சமத்துவமே எம் தேவை, அரசாங்கமே கண்முளித்துப்பார், 8 வருட ஏமாற்றம் இன்னும் தொடருமா?, வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம், புத்திஜீவிகளை உருவாக்கும் அரச ஊழியர்களாகிய நாங்கள் நடுத்தெருவில் என்பனபோன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

No comments: