News Just In

1/04/2024 07:24:00 PM

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் : கைதான மேற்பார்வையாளர் மீண்டும் விளக்கமறியலில்!



அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாபாத் பகுதியிலுள்ள பெண்கள், சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும், இது தொடர்பான வழக்கினை எதிர்வரும் 17ஆம் திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று புதன்கிழமை (3) மீண்டும் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்ஸுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் தந்தை, சகோதரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு, அதனை தொடர்ந்து நீதவானின் கட்டளைக்கிணங்க, 28 வயதான குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: