News Just In

10/14/2023 06:25:00 PM

பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்பு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்பு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான செயற்குழு கூட்டம் நடைபெற்றது.




(நூருல் ஹுதா உமர் )

இறக்காமம் பிரதேச சிறுவர்களின் உரிமை, பாதுகாப்பு, அபிவிருத்தி, சிறுவர் நலன் மற்றும் மேம்பாடு மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள், பெண்கள் எதிர்நோக்கும் துஷ்பிரயோகங்கள், அவர்களின் பாதுகாப்பு, அரோக்கியம் என்பவை தொடர்பாக காலாண்டுக்கு ஒருமுறை இக்கூக்கூட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், 2023 ஆம் வருடத்தின் இரண்டாவது காலாண்டுக்கான பிரதேச சிறுவர் கண்காணிப்பு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான செயற்குழு கூட்டம் (DCMC & SGBV Task Desk) உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச சிறுவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை இடை விலகள், கல்வி ரீதியான பிரச்சினைகள், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு, பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள், சிறுவர்களை மையப்படுத்திய போதைப் பாவனை, இளவயது திருமணம், சிறுவர்களின் சுகாதார மேம்பாடு, விஷேட தேவையுடைய சிறுவர்களின் நலனோம்பல் தொடர்பான விடயங்கள் மற்றும் கிராம மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் (VCDC) 2023 ஆம் ஆண்டு வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

மேலும், பால்நிலை வன்முறை மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பிரதேச மட்டத்தில் தங்கள் அமைப்பு சார்ந்த வேலைத்திட்டங்கள், குடும்ப வன்முறை, பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள் அவற்றை குறைப்பதற்கும் தடுப்பதற்கும்மான நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

மேற்படி கூட்டத்திற்கு கணக்காளர் திருமதி றிம்ஷியா அர்சாட், பொலிஸ் நிலைய நிருவாக பொறுப்பதிகாரி எம்.வை. ஜௌபர், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் யூ.எல். அசார்டீன், நிருவாக உத்தியோகத்தர் (GN) எச்.பி. யசரட்ன பண்டார ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் சிறுவர் நன்னடத்தை திணைக்களம், பிரதேச சபை செயலாளர், ஜும்ஆ பள்ளிவாசல், ஜமிய்யதுல் உலமா சபை, பொதுச் சுகாதார பரிசோதகர் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் பிரதிநிதிகள், கோட்டக்கல்வி அலுவலகம், அதிபர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மகளிர் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி வி.யஷோதா அவர்களின் ஒருங்கிணைப்பில் இக்கூட்டம் நடைபெற்றது.

உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். முஹம்மட் இம்டாட், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். எம்.கே. சாஜிதா, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.ஐ. பஸீனா உள்ளிட்ட பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

No comments: